Monday, April 20, 2020

மலைகளும் நதிகளும் - 2


அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
 (Part - 2)
தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

உத்ராகண்ட்:


உத்ராகண்ட் 08-09-2019 – ஞாயிற்று கிழமை: இன்றைய நிகழ்ச்சிகளை நாம் தொடுக்கும் முன்பு, உத்தராகண்டம் அல்லது உத்ராகண்ட் மாநிலம் பற்றி சிறிது தெரிந்துக்கொள்வோம். ”உத்தர” என்றால் ”இன்றைய”, ”தற்போதய”, ”புதிய” என்று பொருள்படும். ”காண்ட்” என்பது ”கண்டம்” “பெரிய இடம்” எனப் பொருள் படும். ”இன்றைய புகழ்பெற்ற இடம்” என உத்தாகண்ட் என்ற சொல்லுக்கு பொருள் தரலாம். வடலூர் என்ற ஊருக்கு வள்ளற்பெருமான் வைத்த பெயர் “உத்தர ஞான சிதம்பரம்” ஆகும். அதாவது ”இன்றைய சிதம்பரமாக விளங்குவது வடலூர்” என்று பொருள்படும்படி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட் என்று பெயர் வரும் முன்பு இம்மாநிலம் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டது. இம்மாநிலம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாநிலம் 09-11-2000 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உத்தராஞ்சல் என்று 2006-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டது. பிறகு உத்தரகாண்ட் என பெயர் மாற்றம் பெற்றது. இம்மாநித்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன் (டேராடூன்) உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராகும். எனினும் இம்மாநிலத்தின் உயர்நீதி மன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத்தின் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரிதுவார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவைகள் உத்தராகண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்ட் மாநிலம் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும், குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1.ஹரிதுவார், 2.உத்திரகாசி, 3.சமோலி, 4.ருத்ரபிரயாக், 5.டெக்ரி கர்வால், 6.டேராடூன், 7.பெளரி கர்வால், 8.பித்தோரகர், 9.பாகேஸ்வர், 10.அல்மோரா, 11.சம்பாவத், 12.நைனிட்டால், 13.உதம்சிங் நகர். இம்மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. மேலும் இம்மாநிலத்தில் மொத்தமாக 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை 5 நகரங்கள் மட்டுமே. இம்மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

2011 – ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இம்மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 100,86,292 ஆகும். 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82% ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு 87.40%, பெண்களின் படிப்பறிவு 70.01% ஆகும். இம்மாநிலத்தில் இந்து சமயத்தினர் 83,68,636, இஸ்லாமியர்கள் 14,06,825, கிறுத்துவர்கள் 37,781, சீக்கியர்கள் 2,36,340, பெளத்தர்கள் 14,926, சமணர்கள் 9,183, சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608, பிற சமயத்தவர்கள் 993 ஆகவும் உள்ளனர்.
இம்மாநிலத்தில் காட்டுயிர் காப்பகம் மற்றும் தேசியப்பூங்கா அமைந்துள்ள இடங்கள் கங்கோத்ரி தேசியப்பூங்கா, கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் ஆகும். டேராடூன், நைனிட்டால், முசோரி, அல்மோரா ஆகியவைகள் மலைவாழிடங்கள் ஆகும். (இம்மாநிலம் முழுதுமே மலைவாழிடங்கள்தான். நாம் குறிப்பிட்டது சுற்றுலாவிற்கான மலைவாழிடங்களாகும்.)

நாம் இதுவரை உத்ரகாண்ட் மாநிலம் பற்றி பொதுவில் அறிந்தோம். இன்று நாம் இருப்பது அம்மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் ஆகும். எனவே தற்போது ஹரிதுவார் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். 

ஹரிதுவார்:

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ”ஹரித்துவார்” கடவுளின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது. இந்து வேதங்களில் கபிலாஸ்தானம், கங்காத்வார் மற்றும் மாயாபுரி என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றது. உத்ராகாண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களுக்கும் நுழைவாயிலாக ஹரிதுவார் இருக்கின்றது. எனவே இதனைச் சைவர்கள் ஹர்த்வார் என்றும் வைணவர்கள் ஹரித்வார் என்றும் அழைக்கின்றனர். ஹர் என்பது சிவனையும், ஹரி என்பது விஷ்ணுவையும் குறிக்கின்றன. 

சப்த புரி என்றழைக்கப்படும் இந்தியாவின் 7 புனிதமான நகரங்களில் ஹரித்வாரும் ஒன்றாகும். (அந்த ஏழு நகரங்கள்: காஞ்சிபுரம், துவாரகை, உஜ்ஜைனி, வாரணாசி, அயோத்தி, மதுரா, ஹரித்வார்) புகழ்பெற்ற மன்னரான விக்ரமாதித்யரின் காலத்திலிருந்து ஹரித்வாரின் வரலாறு துவங்குகின்றது. ஹரித்துவாரின் பெரும்பாலான புண்ணிய தலங்கள் கங்கைக் கரையில் அமைந்துள்ளன. கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கையானது பல பள்ளத்தாக்குகளைக் கடந்து முதன் முதலில் சமவெளியில் பாயக்கூடிய இடமாக விளங்குவது இந்த ஹரிதுவாராகும்.

நமது இராஜேந்திர சோழன்1019-ஆம் ஆண்டில் கங்கைவரை படையெடுத்துச் சென்று அப்பகுதிகளை வென்றதால் கங்கைகொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்ற பெயரும் ஏற்பட்டது. கங்கையை வென்றதால் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை1023-ஆம் ஆண்டு தமிழகத்தில் உருவாக்கி அங்கு சிவன் கோயிலையையும் எழுப்பியதை இங்கே நாம் நினைவு கொள்வோம். பண்டைய தமிழ்ப் புலவர்கள் இந்நகரை கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்று குறிப்பிட்டுள்ளனர். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக ”கங்கை கொண்ட சோழப் பேரேரி” அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்ற பெயரும் உண்டு.

ஹரித்துவாரில் கும்பமேளா கொண்டாடுகின்றார்கள். கிண்ணத்திருவிழா எனத் தமிழில் கூறலாம். கிண்ணமா…? அது என்ன கிண்ணம்? என பார்க்கலாம். அமுதம் நிறைந்த கிண்ணத்தை (பாத்திரம்) அடைய முயற்சித்த கதைதான் இந்த திருவிழாவிற்கு மூலமாகும்.

முன்னொரு காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கி இருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களை துரத்திச் செல்லும் தேவர்களும் 12 நாட்களும், 12 இரவுகளும் (12 ஆண்டுகளுக்கு சமம்) போர் புரிந்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் அதன் கிண்ணத்திலிருந்து சிந்தியது. சிந்திய அமிர்த பானம் பூலோகத்தில் நான்கு இடங்களில் விழுந்தது. ஹரித்துவார், அலகாபாத், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் விழுந்தன. ஹரிதுவாரில் அமிர்தம் விழுந்த இடம் மிகப் புனிதமான மலைவழியான ஹர் கி பாவ்ரியில் (இறைவனின் காலடிகள்) பிரம்ம குந்த் எனக் கருதப்படுகின்றது. 12 ஆண்டுகள் போர் நடைபெற்றதால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் கூடுமிடம் – பிரயாகை) கும்பமேளா நடைபெறும். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவும் இங்குதான் நடக்கும். நிர்வாண நாகா சாதுக்கள் கூட்டம் கடுங்குளிரிலும் இங்கு வந்து நீராடுவர். ராம்குட் என்னுமிடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுவர். பின்னர் சாதுக்கள் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறிவார்கள். அந்நாணயங்களைப் பெற மக்கள் முட்டி மோதுவார்கள். அந்நாயணயங்கள் அரிய சக்தி கொண்டதாக மக்கள் நம்புகின்றனர்.

ஹரிதுவாரில்தான் முதலில் கும்பமேளா துவங்கும். அதனைத் தொடர்ந்து மற்ற மூன்று இடங்களான பிரயாகை, நாசிக், உஜ்ஜயனி ஆகிய ஆற்றுப்படுகைகளில் இவ்விழா நடைபெறும். இவ்வனைத்து இடங்களிலும் மூன்றாடுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது.

ஹரித்வார் மாவட்டம் மேற்கில் சஹரான்புர், வடக்கில் டேராடூன், கிழக்கில் பெளரி கர்வால், தெற்கில் ரூர்க்கி, முசாபர் நகர் மற்றும் பிஜ்னூர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மாவட்டத் தலைமை அலுவலகம், ஹரிதுவாரின் இரயில்வே நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரோஷ்னாபாத்தில் உள்ளது. 

ஹரிதுவார் மாவட்டம் பெரும்பாலும் காடாக உள்ளது. மேலும் ராஜாஜி தேசியப்பூங்கா மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் சாகசப் பிரியர்களுக்கு பொருத்தமான செல்லிடமாக உள்ளது. ஹரிதுவார் மாவட்டம் இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 2360 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 820 அடி உயரத்தில் வடக்கு மற்றும் வட கிழக்கில் ஷிவாலிக் மலைகளுக்கும் தெற்கில் கங்கா நதிக்கும் இடையில் உள்ளது.

ஹரிதுவாரில் கங்கோத்ரி, குஷ்வர்த், கன்வால், மன்சா தேவி, சாண்டி தேவி ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் பார்க்க வேண்டியவையாகும். மேலும் மாயா தேவிக் கோயில், தக்ஷேஷ்வர மஹாதேவ் கோயில், நீல் தாரா பக்ஷி விஹார், சதி குந்த், பீம்கோடா ஏரி, ஜெய்ராம் ஆஷ்ரமம், சப்த ரிஷி ஆஷ்ரமம், சப்த சரோவர், இராமானந்த் ஆஷ்ரமம், ராம் மந்திர், தூதாதாரி பார்ஃபானி கோயில், சுரேஷ்வரி தேவி கோயில், பாவன் தாம், பாரத மாதா மந்திர், ஆனந்தமயீ மா ஆசிரமம், பிரான் காளியார் போன்ற இடங்களும் பார்க்கத்தக்கவை. நகரைச் சுற்றி பிற கோயில்களும் உள்ளன. ஹரிதுவாரில் மதுவோ இறைச்சி உணவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக அறியவேண்டியதாகும். 

2013-ஜூன் மாதம் இம்மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத் கோயில் (முக்கிய கோயில் தவிர) அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்தன. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு 2014-மே மாதம் திறக்கப்பட்டது. இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு கேட்டுக்கொண்டதின் பட்சத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடமானது பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரிதுவார்) பரந்த நிவாரணப் பணிகளை 21- ஜூன் முதல் 4 – ஆகஸ்ட் வரை மேற்கொண்டது.  



ரிஷிகேஷ் – கங்கா நதி



















                                             கேதார் நாத்










https://youtu.be/LGgZOLBclYY   
கேதார்நாத் அழிவுகள் வீடியோ இணைப்பு.

நதிகளும் மலைகளும் முதல் பகுதியினை கீழ் காணும் இணைப்பில் படிக்கலாம்.
https://vallalarr.blogspot.com/2019/10/blog-post.html 

(தொடரும் - 2)

1 comment:

  1. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.