Friday, March 11, 2016

"புத்தம்" - ஜனவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "புத்தம்" - ஜனவரி-2016

JANUARY - 2016

                                                          சொத்துரிமை மறுப்பு
 
     புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் தனிப்பட்ட சொத்துரிமையை மறுக்க வேண்டும். தனிப்பட்ட சொத்துரிமையினால் தான் ஆசைகள் எழும்புவதாகவும் அதனைத் தொடர்ந்து இன்னல்கள் வருகின்றன என்று புத்தர் வகுத்தார்.
     ‘தனிநபர் ஒருவர் எங்கு உள்ளாரோ அங்கு அவருக்குச் சொத்து உள்ளது. எங்கு நான் இருக்கிறேனோ அங்கு என்னுடையதும் இருக்கிறது. எங்குத் தனிச்சொத்து இருக்கிறதோ, அங்கு அதன்மீது ஏதோ ஒரு வடிவில் கட்டாயம் பாசம் வரும். தனிச்சொத்தின் மீதான இந்த ஈடுபாடே அனைத்து தீமைகளுக்கும் மூல வேராகும். ஒவ்வொரு தனித்த செயல்பாடுகளுக்கும், சமூக அநீதிக்கும் மூலகாரணமாகும்" என்கிறார் புத்தர்.
     இச்சமுதாயத்தில் தனிநபர் என்று யாரும் இருக்கக்கூடாது என்கிறது புத்தம். தனி நபர் இல்லாதபோது தனிநபர் சொத்துரிமை எவ்வாறு இருக்க முடியும்? எனவே தனிநபர்ச் சொத்துரிமையை, சாதாரண சொத்துகளை மட்டுமல்ல, குடும்பம், வீடு போன்றவற்றையும் என்றென்றைக்கும் யார் ஒருவர் கைவிடுகிறாரோ அவரே உண்மையான பௌத்தராக இருப்பார்.
     பெளத்த பிக்குகள் மேற்காணும் புத்தரின் கொள்கைகளை முழுமையாக கடைபிடிக்கின்றனர். இது ஆச்சரியப்படத்தக்க புரட்சிகரமான மாறுதல் ஆகும். இந்த தனிநபர் சொத்துரிமை மறுப்பைப் பற்றி சமூக பொருளாதார ரீதியில் ஆய்வோம் எனில், அதன் முடிவு இவ்வுலக மக்களுக்கெல்லாம் நற்பயனை அளிக்கக்கூடியதாகவே இருக்கும். இக்கொள்கை வரலாற்று ரீதியில் பக்குவமடையாத நிலையிலே இன்னும் இவ்வுலகில் நீடிக்கின்றது.
வள்ளலார் கொள்கையை ஏற்கும் சுத்த சன்மார்க்களும், மேற்காணும் தனிநபர் சொத்துக்களை மறுக்கவே வேண்டும். இதனை வேறு சொற்களில் "போத நாசம்" என்பார் வள்ளலார். தன்னுடைய உயிர், உடல், பொருள் ஆகிய மூன்றினையும் இறைவனிடம் ஒப்படைத்தலே போத நாசம் எனப்படும். புத்தரின் கொள்கைப் படி, தனி நபர் என்று யாரும் இருக்கக் கூடாது என்பதும் தனிநபர் சொத்துரிமை இருக்கக்கூடாது என்பதும் சுத்த சன்மார்க்கத்தில் முறையே உடல் சுதந்தரம் மற்றும் பொருள் சுதந்தரம் ஆகியவைகளை விட்டுவிடுதலைக் குறிக்கும். ஆனால் இரண்டிற்கும் சிறிது வேறுபாடும் உண்டு. புத்தரின் கொள்கை சமுதாயப் பார்வையை மையப்படுத்துகிறது. வள்ளற்பிரானின் கொள்கை ஆன்மிகப் பார்வையை மையப்படுத்துகிறது.

செல்வம் எப்படிச் சேர்கிறது? என்பதற்கு புத்தர் பெருமான் இவ்வாறு பதிலளிக்கிறார், "போர்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் துன்மார்க்கத்தின் மூலமே செல்வம் சேர்கிறது". இன்றைய தேதியில் பெரும்பாலும் செல்வம் சேர்வதற்கு இவையே பிரதான வழிகளாக இருப்பதைக் காண்கிறோம். வளர்ந்த நாடுகள் எப்போதும் போர்களையும், ஆக்கிரமிப்புகளையும் செய்துக்கொண்டே இருக்கும். ஏழை நாடுகள் இவை எதுவுமின்றி அமைதி காப்பதை காண்கிறோம். இவ்வாறே தனி நபர்களின் ஆக்கிரமிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவைகளால் அவர்களுக்கு செல்வம் சேர்கிறது.

"பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் போலவே செல்வத்துக்கும் ஒரு முடிவு வரும். அனைத்தையும் போல் செல்வமும் மறைந்துவிடும். இதைத் தடுக்கமுடியாது. எனவே, நிலையற்ற இந்த செல்வத்தைத் தேடி வாழ்வை வீணாக்கவேண்டாம், சொத்துகளைக் குவித்துக்கொள்ளும் பொருட்டு போரிட்டுச் சாகவேண்டாம்"

‘சாதாரண சொத்து மனித குலத்தின் இறுதி லட்சியமாக இருக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அது தோன்றுவதும் எதிர்காலத்தில் அது உதிர்வதும் தவிர்க்கவியலாதது.’ என்கிறார் புத்தர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.