Friday, March 11, 2016

"சமணம்" - ஜனவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சமணம்" - ஜனவரி-2016

JANUARY - 2016

                                                                       பஞ்ச மந்திரம்

    ஜைனர்கள் நாள்தோறும் பஞ்சபரமேஷ்டிகளை வணங்க வேண்டும். பரமேஷ்டி என்றால் உயர் நிலையில் உள்ளவர்கள் எனப்பொருள். அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் ஆகியோர்களே அந்த ஐந்து உயர் நிலையில் உள்ளவர்கள் ஆவர். அப்படிப்பட்ட பஞ்சபரமேஷ்டிகளின் திருப்பெயர்களைக் கொண்டு வழிபடுவதே பஞ்ச மந்திரம் ஆகும்.

    ஒருவன் இல்லற அல்லது துறவற நெறிகளை பின்பற்றி வீடு பெறுதலே மனித வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். காட்சி நிலை முதலான ஸ்ராகவ நிலைகளில் முன்னேறி முறையே சாதுக்கள், உபாத்தியாயர், ஆசாரியர், அரகந்தர், சித்தர் பதவிகளை அடைய வேண்டி உள்ளுணர்ச்சியைத் தூண்டுவது இந்த பஞ்சமந்திரமாகும். வீட்டுலகை நோக்கி பயணம் செய்வோர்க்கு இம்மந்திரம் மிக முக்கியம்.

நமோ அரகந்தாணம் / அருகரை வணங்குகிறேன்
நமோ சித்தாணம் / சித்தரை வணங்குகிறேன்
நமோ ஆயிரியாணம் / ஆசாரியரை வணங்குகிறேன்
நமோ உவஜ்ஜாயாணம் / உவாத்தியாயரை வணங்குகிறேன்
நமோ ளோயேசவ்வ சாஹீணம் / எல்லா சாதுக்களையும் வணங்குகிறேன்

    என்பதே இந்த பஞ்ச மந்திரமாகும். இங்கு ஐவகைச் சிறந்தோரைக் குறித்து வணக்கம் செலுத்தப்படுவதால் ஐவர் வணக்கம், ஐம்பத மந்திரம், ஐம்பத அமிர்தம், ஐம்பதம் என்கிற பெயர்களும் இம்மந்திரத்திற்கு உண்டு.

    அனைத்தும் துன்பங்களில் இருந்து விடுபட்டு உய்யும் வண்ணம் அவர் அறம் உரைத்தலால் அவரை முதலில் நாம் வணங்குகிறோம். வினையெல்லாம் கெடுத்து வீட்டுலகை அடைந்த சித்த ஜீவனைக் காண்பவர் எவருமிலர்.

    உடல் உடையவர்கள்தான் அறம் போதிக்க முடியும். எனவே காதி வினைமட்டுங்கெடுத்து முழுதுணர் ஞானம் பெற்ற அருகனே விதிப்படி தருமம் போதிப்பதற்கு முழு உரிமையும் கடமையும் பெற்ற வராதலாற், "நமோ அரகந்தாணம்" என முதலில் கூறுகிறோம்.

    மேற்காணும் உயர் நிலையில் உள்ள ஐந்து திருவாளர்களுடன் சேர்த்து உயர்ந்ததாகக் கருதப்படும் ஜிநதருமம், ஜிநஸ்ருதம், ஜிநசைத்யம், ஜிநசைத்யாலயம் ஆகிய நான்கையும் சேர்த்து நவதேவதைகள் எனப்போற்றப்படுவர். இவர்களை ஜைனர்கள் தினமும் வழிபடுவர்.

நவ தேவதைகள்:

1. அருகர்: ஆதி வினைகள் நான்கையும் நீக்கி உலகில் அமைந்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அவை உள்ளவேறே அறியும் ஆற்றல் பெற்றவர். அறவுரை மண்டபத்தில் எழுந்தருளி உயிரினங்கள் துன்பங்களினின்றும் விடுபடும் வழியை அருளிச் செய்யும் அறவாழி அண்ணல். முனிவரர், ஆர்யகை, சிராவகர், சிராவகி எனும் நான்கு சங்கங்கட்கும் இவர் தலைவர்.

2. சித்தர்: வினைகள் எல்லாவற்றையும் நீக்கி, எண்வகைச் சிறப்புகளைப் பெற்று மீண்டும் பிறவா நிலையை அடைந்த ஆன்மன்.

3. ஆசாரியர்: வீடுபேறு அடைவதற்குக் காரணமான எட்டு ஞான ஒழுக்கங்களையும் ஆறு புறத்தவங்களையும் ஆறு அகத்தவங்களையும் ஐவகை நடத்தை ஒழுக்கங்களையும், ஐம்பெருநோன்புகளையும் கைகொண்டு ஒழுகி ஐந்து வீரிய ஆசாரங்களைப் பெற்றவராய் பிறரையும் இந்நெறிகளிற் ஒழுகச் செய்வர்.

4. உபாத்தியாயர்: ஜிநேஸ்வரனால் அருளிச் செய்யப்பட்ட அறங்களைக் கூறும் பதினொரு அங்காகமங்களையும் பதினான்கு பூர்வங்களையும் இடைவிடாது பயில்வரும் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்தலையும் கடமையாகக் கொண்டவர். ஞான ஒழுக்கம், தர்சன ஒழுக்கம், தவ ஒழுக்கம், மூவடக்கம், வீர்ய ஒழுக்கம் ஆகிய ஐந்துவகை ஒழுக்கங்களையும் உடையவர்.

5. சர்வசாதுக்கள்: பல்வகையான தவங்களையும், உபவாசங்களையும், பேசா நோன்பையும், மும்மணியையும் தரித்தவர்கள். ஆன்ம வளர்ச்சிக்கு தளர்விலாது முயற்சிப்பவர்.

6. ஜிநதருமம்: நால்வகைக் கதிகளில் ஏற்படும் துன்பங்களை அகற்றி நிலைபேறான மோட்ச இன்பத்தைத் தரக்கூடிய அருகமொழி.

7. ஜிநஸ்ருதம்: ஜிநேஸ்வரனால் அருளிச் செய்யப்பட்ட அறங்களைக் கொண்ட அங்க ஆகமங்களும் பூர்வங்களும், பிற அற நூல்களும்.

8. ஜிநசைத்யம்: ஜிநேஸ்வரருடைய திருவுரு.

9. ஜிநசைத்யாலயம்: ஜிநேஸ்வரருடைய திருவுரு எழுந்தருளியுள்ள ஆலயம்.

ஆக இந்த சிறப்பான ஒன்பது நவதேவதைகள் ஆகும். இதனை வணங்குபவர்கள் ஜைனர்கள் ஆவர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.