Saturday, June 20, 2015

கட்டி பதிகம்

அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
                             தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOWJJYUZlcXRaQmM/view?usp=sharing
கட்டி பதிகம்
++++++++++++

நடு நின்று நடமாடுமென் நாயகனே
      நான் படும் பாடுனக்கு
சடு குடுஆட்டம் போல் உளதோ
      சமரசம் உலாவும் மேனியின்
இடுப்பில் கட்டி தோன்றியதை வெட்டி
      எடுக்க வேண்டுமோ? அந்தோ
விடு விடுஎன்று சொல்லாய்! உடனே
      வடுவு மின்றி மறையுமே.                   1

பாவம் பல செய்யுனும் அருட்
      பெருஞ் ஜோதியே நின்
ஏவல் என்னு டம்பில் புகுந்து
      இடையில் கட்டியாய் வந்தே
காவல் புரியுமுன் மறக் கருணையை
      காயம் தாங்குமோ? அந்தோ
ஆவலாய் பணிகிறேன் மன்னித் தென்னை
      ஆண்டு சுகமளித் தருளே.                    2

கட்டித் தழுவுமுன் அன்புக் கரங்கள்
      கடிந் தெனை அடிக்குமோ?
கட்டி முடித்த சபையுள் இடியென
      கலங்க மொன்று வருமோ?
கட்டி என் இடையில் பெருகி
      கண் கலங்க வைக்குமோ?
கட்டிக் கரும்பென இனிக்கும் நின்
      கருணைக்கு இது அழகோ?                   3

மருந்து வகைகள் மறந்தாய் ஏனோ?
      மருத்துவ மனைகள் பல
இருப்பதால் தானோ? இருந்தும் எனது
      உடம்பி லுறும் கட்டி
கருவற தேய்ந்து மறைய உன்
      கடைக் கண் பார்வை
அருளால் மட்டுமே முடியும் அன்றோ?
      என் இராமலிங்க அப்பனே.                    4

பதிகம் பாடிப் பணிந்து உனைப்
      பிரியா திருக்க நான்
அதிகம் ஆசை வைத்தேன் ஐயாவே
      என்னுடலில் நீ இருக்க
விதி செய்து, அவ்வுடலில் கட்டி
      வந்துவீங்க, வலி எனக்கென
சதி செய்து சுகமாய் நீஇருப்பது
      சன்மார்க்க செயல் அன்றே.                   5

பலவித பரோபகாரம் செய்த என்
      பதியே இன்று எனக்கு
நலம் அருள்வாய் என்றே உனை
      நாடி வந்தேன் குருவே
உலகம் வியக்கும் வண்ணம் எனது
      உடல் மேவியக் கட்டியை
சலத்தில் கறைந்த உப்பாய் ஓரிரவில்
      சடத்தில் மறைத்து அருளே.                   6

பாவியேன் செய்த பாவம் எதுவோ
      புகலாய் என் இறைவா
காவி உடையுடன் காமக்கண் கொண்டு
      களிப் போர்க்கும் அருளினாய்
ஆவி போகஉயிர் கொலை செய்து
      உண் போர்க்கும் அருளினாய்
நாவினால் உனையே பாடி மகிழும்
      நாயேனுக்கு ஏனிந்த கட்டியே?                  7

ஒன்றும் தெரியாதவன் போல் என்னுள்ளே
      ஒளிந்து ஒளிரும் ஒளியே
கன்றுக்கு பசிவந்தால் மடிதேடி அருந்துமே
      காயத்துள் கட்டி வரநானும்
உன்னருள் தேடி முட்டுகிறேன் மடிகாட்டி
      ஊட்டாயோ ஊன மகற்றி
என்னிடை கட்டியை அகற்றாயோ வலி
      அகற்ற விரைந்து வருவாயே.                   8

புழுக்கள் விரும்பும் உடலோ இது
      புண்ணியன் புகுந்த புனித
விழுதுகளால் என்றும் வீழாத மெய்
      வார்ப்பன்றோ அந்தோ இதில்
இழுக்காக வந்தக் கட்டியை உனது
      எல்லாம் வல்ல அருளால்
பழுக்க விடாமல் வடு தெரியாமல்
      போகச் செய்வாய் புறத்தே.                      9

உடலூரில் குடிகொண்ட உன்னைத் தேடி
      அயலூர் சென்று வந்தேன்
கடலூரில் எழும் கதிரவனைக் காண
      காரிருளில் சென்று வந்தேன்
சடமூரில் இறந்தாரைக் காண பழச்
      சாறு வாங்கிச் சென்றேன்
வடலூரில் ஜோதி காண மக்களின்

      வாட்டமெலாம் ஓடக் கண்டேனே.                10
+++++++++++++++++++++++++++++++++++++


https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOWJJYUZlcXRaQmM/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.