Friday, August 11, 2017

கர்ம வினைகள் இங்கேயும் உண்டோ…?

கர்ம வினைகள் இங்கேயும் உண்டோ…?


நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும். நீ கெட்டது செய்தால் உனக்கு கெட்டது நடக்கும். கர்மங்களின் பயனை துய்க்கவே உலகம் படைக்கப் பட்டிருக்கின்றது. நல்லது செய்தால் உங்களுக்கு வர்ம் நல்லதைக் கடவுள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் கெட்டது செய்தால் உங்களுக்கு அதன் பயனாக உண்டாகும் தீமையைக் கடவுள் தடுத்துவிடப் போவதும் இல்லை. அதனால் கடவுளைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்பட வேண்டும்?

          இவ்வாறு உபதேசிப்பது பூர்வ வேதமான பூர்வமீமாம்சை ஆகும். இதனை கர்ம வாதிகள் மதம் என்பர். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் வேறு சொல்லிவிட்டு போய்விட்டார். வாழும் மக்காளான நமக்கு ஏகப்பட்ட குழப்பம்.

“நான் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து யாருக்கும் கெடுதல் செய்ததில்லையே. அப்படியிருக்க எனக்கு ஏன் பிறரால் கெடுதல் ஏற்பட்டது? நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்? கர்ம வினை தத்துவத்தின் படியே இது தவறாக இருக்கின்றதே!” என்று ஒருவன் ஒரு ஞானியிடம் கேட்டால்… அதற்கு அந்த ஞானி, “அப்பா… இப்போது நீ அடையும் துன்பம் சென்ற பிறவியில் நீ பிறருக்குச் செய்த துன்பத்தின் பலனாக அனுபவிப்பது” என்று சொல்லி தப்பித்துக்கொள்கின்றார்.  

அட கர்மமே… சென்ற பிறவியில் நான் யார் என்று எனக்குத் தெரியாது. சென்ற பிறவியில் நான் என்ன செய்தேன் என்றும் எனக்குத்தெரியாது. சென்ற பிறவியில் நான் X – ஆக இருந்திருக்கலாம். இந்தப்பிறவியில் நான் Y – ஆக இருக்கின்றேன். அதனால் X – செய்த வினையினை Y – அனுபவிப்பது எப்படி சரியாகும்… என கர்ம தத்துவத்தை நிந்திக்கின்றான்.

அவன் மீண்டும் அதே ஞானியிடம் சென்றான். “என் பக்கத்து வீட்டுக்காரன் பிறருக்கும் பிற உயிர்களும் கெடுதலே செய்கிறான். ஆனால் அவன் என்னை விட எல்லாவற்றிலும் சுகமாய் வாழ்கின்றானே… அது எப்படி? என்கின்றான். அதற்கும் அந்த ஞானி, “அவன் சென்ற பிறவியில் செய்த புண்ணியம் இப்பிறவியில் அவனுக்கு சுகத்தைக் கொடுக்கின்றது” என்றார்.
         
அவன் சென்ற பிறவியில் Y – ஆக இருந்திருக்கலாம். இந்தப்பிறவியில் X – ஆக இருக்கிறான். சென்ற பிறவியில் Y – செய்த புண்ணியம் இந்தப் பிறவியில் X – க்கு கிடைப்பது எப்படி சரியாகும்… என கர்ம தத்துவத்தை மீண்டும் நிந்திக்கின்றான். (X என்பதும் Y என்பதும் ஒரே ஆன்மாதான். பிறவிதோறும் குணத்தால் வேறுபடுவதை X, Y என்கின்றேன்.)

அவன் கர்ம வினைகளை எதிர்ப்பதற்கு காரணம் இருக்கின்றது. என்ன காரணம்?... சென்ற பிறவியில் X – ஆக இருந்து தீய வினைகளையே அதிகம் செய்தவனான நான், இந்தப் பிறவியிலும் எனது கர்ம வினை காரணமாக X –ஆகத்தானே (தீய குணமுள்ளவனாக) பிறந்திருக்க வேண்டும். ஆனால், நான் எப்படி Y – யாகப் பிறந்து தீயதை நீக்கி நல்லதையே செய்கின்றேன்.

என் பக்கத்து வீட்டுக்காரன் சென்ற பிறவியில் Y – ஆக இருந்து நல்லதையே அதிகம் செய்தவன், கர்ம வினை தத்துவப்படி இந்தப்பிறவியிலும் அவன் Y – ஆகத்தானே பிறந்திருக்க வேண்டும்? மாறாக அவன் இப்பிறவியில் X  - என்னும் தீயவனாக ஏன் மாறவேண்டும்?

இங்கே, அந்த ஞானி சொன்னதற்கு மாறாக கர்மவினைத் தத்துவம் சற்றே தடுமாறுகின்றது என்றறியலாம்.

வள்ளற்பெருமான் இதுபற்றி என்ன கூறுகின்றார்…

“சீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன் தேகத்தில் சீவகாருண்யம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகும், சிலர் காட்டு மிருகங்களாகவும், பட்சிகளாகவும், செந்துக்களாகவும், தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்று அறியவேண்டும்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-153) என்று  வள்ளலாரும் கர்ம வினைக்கு ஆதரவாகவே உரைக்கின்றார். ஆனால் சென்ற பிறவியில் X – ஆக இருந்த தீய ஆன்மா அடுத்த பிறவியிலும் X – ஆகத்தான் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாகக் கூறுகின்றார்.

சென்ற பிறவியில் X –ஆக இருந்து தீய ஒழுக்கங்களை மிகுதியாகச் செய்தவர்கள் இந்தப்பிறவியில் மனிதர்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். அம்மனிதர்கள் யார் யார்? என்றால், நரகவாசிகள், சமுத்திரவாசிகள், ஆரண்யவாசிகள் என்ற மூன்று பிரிவாகப் பிரிக்கின்றார்.

பிறருக்கு எண்ணம், சொல், செயல்களால் தீங்கு செய்பவர்கள், பிற உயிர்களை கொலை செய்பவர்கள், பிறர் கொலை செய்ய தாம் மறைமுகமாகவோ நேரடியாகவோ காரணமாக இருப்பவர்கள், புலால் உண்பவர்கள் இவர்களெல்லாம் மனித தேகத்தில் உள்ள நரகவாசிகள்.

கடலில் உள்ள உயிரினங்களை வலையிட்டு கொலை செய்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனித தேகத்தவர்கள் சமுத்திரவாசிகள் ஆவர்.

காட்டில் உள்ள விலங்கினங்களை கொன்று அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனித தேகத்தவர்கள் ஆரண்யவாசிகள் ஆவர். மனித தேகத்தில் இருக்கும் இந்த மூன்று வகையினரையும் “புற இனத்தார்கள்” என்ற ஒரே வட்டத்துக்குள் அடைக்கின்றார் வள்ளலார்.

X – என்னும் தீய ஆன்மாக்கள் இம்மூன்று மனித தேகத்திற்கு அடுத்தபடியாக அஃறினை பிறப்புகளையும் எடுக்கின்றன.  

X -  என்னும் தீய ஆத்மாக்கள் Y – என்னும் நல்ல ஆத்மாவாக பிறக்க முடியாதா? என்றால் முடியவே முடியாது. கர்மவினை தத்துவமானது நல்லவர்களாக பிறக்க விடாது. பிறகெப்படி அவர்கள் மேலேறுவது?

ஆதியில் எல்லா ஆன்மாவும் Y – என்ற நல்ல ஆன்மாவாகத்தான் இருந்தது. நற்செயல்களே செய்தன. ஆனால் அவை எப்படி ஏதோ ஒரு மறுபிறவியில் X – என்னும் தீய பிறவியாக பிறப்பெடுத்தன? கர்மவிதிப்படி முடியாதல்லவா? இதற்கான விடை கண்டுவிட்டால், அந்த விடைக்காண காரணத்தைக் கொண்டுதான், தாம் வந்த வழியே பின்னோக்கி பயணப்பட்டு X – என்னும் தீய ஆன்மாக்கள் தமது ஆதிப் பிறவியான Y – என்னும் நல்ல ஆன்மாவாக மாறமுடியும்.

அது என்ன விடை என பார்ப்போம்…
“கடவுள் அருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில் தமது இயற்கை இன்பத்தை அடையும்படி விதித்த விதிகளைப் பழமையாகிய மல வாசனையால் முயற்சி தவறினபடியால்…” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-146) என்ற இந்த வள்ளலாரின் போதனையில்தான் எல்லா ரகசியமும் அடங்கியுள்ளன. இயற்கை இன்பம் என்பது, “எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய மரணமில்லா பெருவாழ்வு” ஆகும். இது இறைவன் காணுகின்ற இன்பமாகும். அந்த இன்பத்தை ஆன்மாக்களாகிய நாமும் பெற வேண்டுமென்ற இறைவனின் கருணையால், இயற்கை என்னும் பிரபஞ்சத்தில் உலகங்களை படைத்து, அவ்வுலகில் எங்கோ மலத்தில் ஊறிக்கொண்டிருந்த ஆன்மாவாகிய நம்மை எல்லாம் ஜீவனாக பிறப்பெடுக்க வைத்தான்.

   மரணமிலா பெருவாழ்வு என்ற பூரண இன்பத்தை பெறுவதற்காக இறைவன் ஒரு விதியையும் விதித்தான். அதுதான் ஜீவகாருண்யம் என்கின்ற விதி. அவ்விதியை அன்றைக்கே நாம் கடைபிடித்திருந்தால், நான் இதனை எழுதத்தேவை இருந்திருக்காது. நீங்களும் இதனை படித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். நாமெல்லாம் பூரண கடவுள் இன்பத்தில் மிதந்துக்கொண்டிருப்போம். ஆனால், ஏன் இவ்விதியை கடைபிடிக்க வில்லை? என்றால், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் நமது முதல் பிறப்பிற்கு முன்பு ஆணவம் என்கின்ற மலத்தில் மூழ்கியிருந்தோம். அந்த ஆணவமான மலம் நம்மை முதற்பிறவியிலேயே ஜீவகாருண்ய விதியை கடைபிடிக்கவிடாமல் தடுத்துவிட்டது. நாமும் முயற்சி செய்யாமல் அவ்விதியை அலட்சியப்படுத்தி நமக்குக் கிடைத்த தேகத்தை மரணமடைய வைத்துவிட்டோம். அந்த முதல் மரணம் நமக்கு இதுவரை தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது.

ஆமாம், ஜீவகாருண்ய விதிகளை கடந்த 19-ஆம் நூற்றாண்டில்தானே வள்ளலார் மூலாம் இவ்வுலக உயிர்களுக்கு தெரிய வந்தது…. என்று நீங்கள் கேட்கலாம். நமது முதல் பிறவியிலேயே ஜீவகாருண்ய ஒழுக்க விதியை இறைவன் நமக்கு உணர்த்திவிட்டான். அதனை கடைபிடிக்காமல் நாம் இன்று அலட்சியப்படுத்துவது போல அன்றைக்கும் அலட்சியப்படுத்தி விட்டோம். அதனால் சில பல பிறவிகளிலே… இறைவனின் இன்பமாகிய இயற்கை இன்பத்தை நம்மிடமிருந்து ஆதியிலேயே மறைத்துவிட்டான் ஒரு வல்லவன். அதனால் அவ்விதி தொடர்ந்து பிறவிதோறும் வராமல் தடைபட்டது. அந்த வல்லவன் மறைத்த அந்த விதியை வள்ளலார் வரும்வரை யாரும் அறியவில்ல்லை. அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. அப்பூட்டை உடைக்கவும் ஒருவரும் வரவில்லை. வள்ளலார் வந்தார், அப்பூட்டைத் திறந்தார். கடை விரித்தார்… ஆனால் கடை விரித்ததை கொள்வார் உளரோ? என்றால்… அவருக்கு பிறகும், நாமும் ஆதியின் மல வாசனையை விடாமல் மாண்டுதான் போகின்றோம் என்பதுதான் வருத்தமாக உள்ளது. வம்மின் உலகியலீர்… என்று அவர் இன்றும் அழைத்துக்கொண்டே இருக்கின்றார். சரி காரியத்துக்கு வருவோம்…

இப்போது நமக்கு விடை கிடைத்துவிட்டது. Y – என்னும் நல்ல ஆன்மாக்கள் தாம் பெற்ற ஏதோ ஒரு பிறவியில், நல்ல கர்மங்கள் செய்வதை விடுத்து தீய கர்மங்களை செய்யத் தொடங்கியதன் விளைவாக, Y- ஆகப் பிறந்து X-ஆக பரிமாணம் அடைந்துவிடுகின்றார்கள். தமது அடுத்தப் பிறவியில் X – என்னும் தீய ஆன்மாக்களாக பிறந்துவிடுகின்றார்கள். அவைகளில் மனித தேகத்தை எடுத்த புற இனத்தார்கள் எல்லாம் என்றைக்கு தாம் செய்யும் தீய செயல்களை விடுத்து ஜீவகாருண்ய கர்மங்களை செய்ய முற்படுகிறார்களோ, அன்றே அவ்வான்மாக்கள் X – நிலையிலிருந்து Y – நிலையினை அடைந்துவிடுகின்றார்கள். அவர்களுக்கு அடுத்த பிறவியில் நிச்சயம் Y – என்னும் நல்ல ஆன்ம தேகங்கள் கிடைக்கும். ஜீவகாருண்யம் ஒன்றே புண்ணியம். ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படும் அனைத்து செயல்களும் பாவங்களே, என்று அறியும் அறிவை என்று X – ஆன்மாக்கள் அறிந்து செயல்படுகிறார்களோ அன்றோடு அவர்கள் கீழ் நிலையை விட்டுவிட்டு, மேலேறும் வீதியில் வந்துவிட்டார்கள். அவர்கள், தாம் முன்பிருந்த ஆதி நிலையாகிய Y-  ஆன்மாவாக நிகழும் பிறவியிலேயே பரிமாணமடைந்து விடுகிறார்கள்.

X – ஆன்மாக்கள் எவ்வாறு Y – ஆன்மாக்களாக மாறுகின்றன என்பதைக் கண்டோம். அடுத்ததாக, இப்பிறப்பில் Y – ஆன்மாக்களான, நல்லதே செய்யும் ஜீவன்களுக்கு ஏன் பிறரால் துன்பம் வந்து நேரிடுகின்றது? கர்மவினைப்படி நல்லது செய்பவனுக்கு நல்லதுதானே வந்து சேரவேண்டும்!  இக்கருத்தினை சற்று பார்ப்போம்.

 சென்ற பிறவியில் ஏதோ கொஞ்சம் தீய நடத்தையில் ஈடுபட்டிருந்த Y – ஆன்மாக்களுக்கு அதற்கான தீய பலன் இப்பிறவியில் வந்து சேரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பெரும்பாலும் அந்த அடிப்படையில் துன்பம் வருவதில்லை.

“நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன், எனக்கு அவசரமாக ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது. வட்டிக்கு கொடுங்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டதால், Y – ஆன்மாவான நானும் இரக்கப்பட்டு, வட்டி எதுவும் வேண்டாம் கைமாற்றாக கொடுக்கின்றேன். இரண்டு மாதம் முடிந்தவுடன் என்னிடம் கொடுத்துவிடு என்று சொல்லி அவனிடம் கொடுத்தேன். அவனும் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி வாங்கிச் சென்றான். இரண்டு மாதம் கழிந்தது, அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே நானே அவன் இல்லம் சென்று எனது ஆயிரம் ரூபாயை எப்போது தருவாய்… என கேட்டதற்கு, பணமா கேட்கிறாய் என என்னை அடித்து அனுப்பிவிட்டான்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிக்கொண்டுதான் உள்ளன. இந்நிகழ்ச்சியில் Y-ஆன்மா நல்லது செய்யபோய், அது அவருக்கே கெட்டதாக முடிந்துவிட்டதே ஏன்? கர்மவினை தத்துவம் பிழையாக உள்ளதே! என்பதுதான் இன்றைக்கு நாம் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.

          நல்ல ஆன்மாக்களான நீங்கள் யாருக்கு நல்லது செய்தீர்கள்? என்பதை எண்ணிப் பார்த்தோமோனால்… X- என்னும் தீய ஜீவன்களுக்கு நல்லது செய்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும். நீங்கள் தீயவர்களுக்கு நல்லதே செய்தாலும், அத்தீயவர்மூலம் உங்களுக்கு எப்படி நல்லது திரும்பக் கிடைக்கும்.

          X – ஆன்மாக்களுக்கு நல்லது செய்யக்கூடாதா? என்றால்… கூடாது என்றே வள்ளலார் போதிக்கின்றார். X – ஆன்மாக்களுக்கு பசி தவிர்த்தல் என்கின்ற உதவியை மட்டுமே செய்ய வேண்டும். மற்றபடி உலகியல் உதவிகள், உறவுகள் என எதுவும் செய்யக்கூடாது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உரைக்கின்றார்.  

“உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
          உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
 பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
          பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
 நயப்புறுசன் மார்க்கமவர் அடையளவும் இதுதான்
          நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே…(4160)

புற இனத்தாரெல்லாம் அக இனத்தாராகி சன்மார்க்க வழியில் வரும்வரையில் அவர்களுக்கெல்லாம் பசி தவிர்த்தல் மாத்திரந்தான் செய்ய வேண்டும். மற்ற அறிவுரைகளையோ, நண்பர் என்று அவர்களுக்கு உதவுவதோ எவ்வகையிலும் கூடாது என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளற்பெருமானுக்கு உரைக்கின்றார்.

          எனவே நாம் புற இனத்தார்களுக்கு உதவிகள் செய்யக்கூடாது. அக இனத்தார்கள் என்றாலும் அவர்கள் சன்மார்க்கிகளா என்று அறிந்து செய்ய வேண்டும். சன்மார்க்கிகள் அல்லாத அக இனத்தாருக்கும் உதவிகள் செய்யதல் கூடாது. அப்படி செய்தால் அவை தீய விளைவுகளையே நமக்கு கொண்டுவந்து கொடுக்கும். இவ்வுலகியல் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க முடியுமா? என்றால்… வரும் வினைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடவுளை குறை சொல்லக்கூடாது.

          அடுத்ததாக X – ஆன்மாவான எனது பக்கத்துவிட்டுக் காரர் அனைவருக்கும் கெடுதலே செய்கின்றார். உயிர்க்கொலையும் செய்கின்றார். புலாலும் உண்கின்றார். ஆனால் அவர் என்னைவிட சுகபோகத்தில் சந்தோஷமாக வாழ்கின்றாரே… அது எப்படி?

          சுக போகங்கள், பணம், பொன், சொத்துக்கள் இவையெல்லாம் தீய வழியில் செல்பவர்களுக்கு மிகச்சீக்கிரம் கிடைத்துவிடும். நல்ல வழியில் செல்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் இவைகள் கிடைத்துவிடாது. வீதி ஓரங்களில் ஆடு வெட்டும் கசாப்பு கடைக்காரன் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் நிகர இலாபம் பெற்றுவிடுவான். இது தீய வழியில் வருகின்ற வருமானம். நல்ல வழியில் செல்பவர்கள் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் வருமானம் ஈட்டுவதே கடினம்.

          தீய வழியில் செல்பவன் கந்துவட்டி, நாள் வட்டி, மாத வட்டி என்று பணத்தைக்கொண்டே மக்களிடம் பணத்தை ஈட்டுவான். நல் வழியில் இருப்பவர்கள் இவ்வாறு செய்ய முடியுமா? இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களை நல்லவர்கள் யாரேனும் செய்ய முடியுமா? நல்லவர்கள் யாரேனும் அரசியலுக்கு வரத்தான் முடியுமா? மக்கள் தீயவர்களையே அரசியலில் ஆதரிப்பார்கள். ஏனெனில் பெரும்பாண்மையான மக்கள் தீயவர்களாக இருப்பதால். பல அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெற்று தீய வழியில் சுகபோகங்களை அனுபவிப்பர். ஒரு நல்ல அரசு ஊழியன் அவ்வாறு செய்ய முடியுமா?

          தீயவன் பத்து வீடு வைத்திருக்கின்றான் என்றால், நல்லவனுக்கு ஒரு வீடு போதும். அவன் பத்து கார் வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு கார் போதும், அவன் பத்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு வங்கியில் கணக்கிருந்தால் போதும். அவன் பத்து பொன்டாட்டி வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு பொன்டாட்டி போதும். அவன் பத்து கடவுள்களை வணங்குகின்றான் என்றால், உனக்கு ஒரு கடவுள் போதும். இவ்வாறு நல்ல வழியில் வருகின்ற வருமானமே Y -  என்கின்ற நல்ல ஆன்மாக்களுக்கு போதுமானதாக இருக்கும்.

          தீய காரியங்களால் ஈட்டப்பட்ட செல்வத்தை நல்ல காரியங்களுக்கு செலவிட்டால், அத்தீயவனுக்கு இறையருள் கிட்டாது. உலகியலில் புகழ் வேண்டுமானால் தாராளமாகக் கிடைக்கும். அவையெல்லாம் நீர்க்குமிழி போன்றது, போலியானது.

          இதனைக் கண்டு நல்ல ஆன்மாக்கள் ஏமாந்துவிட வேண்டாம். பொறாமை பட வேண்டாம். தீய வழியில் சென்றுவிட வேண்டாம். தீய வழியில் வருகின்ற சுகபோகங்கள் அவர்களுக்கு நல்லதுபோன்று தெரிந்தாலும், உண்மையில் அது நாகப்பாம்பைப் போன்றது. அழகாக இருக்கின்றதே என்று அதனுடன் விளையாடுவது போன்றது. ஒரு நாள் அதன் விஷத்தை கக்காமல் அவனை விடாது. எனவே தீயவர்கள் அடையும் சுகபோகங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எனவே போதும் என்ற மனத்துடன் இருப்பதை வைத்து நமது ஆன்ம மலங்களை போக்க முயலுங்கள். அதற்காகத்தானே நமக்கு பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. நமது இலக்கு பூரண இன்பமே ஆகும். அதை நாடி செல்லும்போது உலகியல் இன்பங்களை பொருட்படுத்தக்கூடாது. உலகியர்களின் வாழ்க்கையினை ஒப்பிடுவதை விடுத்து, மற்ற அருளாளர்களின் வாழ்க்கையினை ஒப்பிட்டு அவர்கள் சென்ற பாதையில் நல்ல ஆன்மாக்கள் செல்ல வேண்டும்.

          “அருட்சுக மொன்றே அரும்பெறற் பெருஞ்சுகம்
           மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சுகமே.”

          “அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
           பொருள்நிலை காணெனப் புகன்ற மெய்ச்சிவமே”

என்று அனைத்துக்கும் பெரிய நிலை என்பது அருள் நிலைதான். பொருள் நிலைகளை எல்லாம் காணக்கூடாது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் Y – ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே பக்கத்து வீட்டுக்காரரை பற்றியெல்லாம் நினைக்காமல் உன் சொந்த வீடு நிலைக்க என்ன வழியோ அதனை மட்டுமே செய்தல் வேண்டும்.
         
          ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் Y – ஆன்மாக்கள் எல்லாம் மரணமில்லா வாழ்வினை, பூரண இன்பத்தைப் பெற்ற Z- ஆன்மாக பரிமாணம் அடைதல் வேண்டும் என்பதே இறைவன் ஆதியில் விதித்த விதியாகும். கர்ம வினைகளை நினைத்து மனம் குழம்ப அவசியம் ஏதிமில்லை. X – மற்றும் Y – ஆன்மாக்கள் வரையில் கர்ம வினைகள் செயல்படும். கடவுள் செயல்பட மாட்டார். Y – ஆன்மாக்கள் என்று ஜீவகாருண்ய விதியை கடைபிடித்து Z – ஆன்மாவாக மாறுகின்றார்களோ அன்றிலிருந்து கர்ம வினைகள் தமது செயல்பாட்டினை நிறுத்திவிடும். கடவுள் செயல்படும் நிலை வரும்.

          “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்று நாம் எண்ணியதை கொடுக்கக்கூடிய தெய்வமாக, கடவுள் செயல்படும் நிலையில் நமது வாழ்வு வந்துவிடும். எனவே கர்ம வினைகள் சன்மார்க்கிகளை தாக்காது. கடவுள் செயல் மட்டுமே உண்டாம். எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் Z – ஆன்மாக்களுக்கே பொருந்தும்.

          சன்மார்க்க அன்பர்களுக்கு நன்றி. ஏதேனும் மனம் புன்படும்படி எழுதியிருப்பின் மன்னிக்கவும். தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பினும் தெரியப்படுத்தவும். தவறுகள் இருப்பின் திருத்தம் மேற்கொள்ளப்படும். நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.  

                                            தி.ம.இராமலிங்கம்.




15 comments:

  1. வொண்டேர்புள்

    ReplyDelete
  2. சிறந்த பதிவு ஐயா. நன்றி கலந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  3. அருமை ஜயா நான் இப்பிறவியில் y யா x தா என் நிலை என்ன

    ReplyDelete
    Replies
    1. பாம்பின் கால் பாம்பே அறியும் ஐயா. அருட்பெருஞ்ஜோதி

      Delete
  4. இப்படி ஒரு நல்லபதிவை போட்டதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி

      Delete
    2. நன்றி அம்மா...

      Delete
  5. மிக நல்ல விளக்கம் ஐயா. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வரட்டும்.

    ReplyDelete
  6. There is no explanation for the change of Y soul in a sudden did evil deed.

    ReplyDelete
  7. Arulperum jothi arul perum jothi

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.