Sunday, August 13, 2017

“வந்தே மாதரம்” – இந்தியர்களின் ஒற்றுமையை சிதைக்கின்றதா?



“வந்தே மாதரம்” – இந்தியர்களின் ஒற்றுமையை சிதைக்கின்றதா?

பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838-1897) என்னும் பார்ப்பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”
இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர்களுக்கு விரோதமானவை என்கிற அளவில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.
நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான்.
மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? மகேந்திரனின் கேள்வி இது.
நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிரக்குக்கூட ஆபத்து வந்துவிட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது! என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.
உன் ஒருவனால் இதனை சாதிக்க முடியுமா? மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.
மகேந்திரன் மசியவில்லை. முசுலிம்களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவாநந்தன்.
“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார்கள். வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்! என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.
முயற்சியைக் கைவிடவில்லை - அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கி றான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!
“யார் அந்தத் தேவி” கேட்கிறான் மகேந்திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்த பாரத மாதாவின் புத்திரர்கள்” என்கிறான் கோயில் பூசாரி.
அடுத்து ஒரு காட்சி “ஜெகத்தாத்ரி” ஒளிமயமாகக் காட்சி அளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.
ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ‘ஜெகஜோதி’யாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரியுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்? கேட்கிறான் மகேந்திரன்.
“அன்று ஜெகஜோதியாகக் காட்சியளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.
மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங் களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.
அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்திரனுக்குக்காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே” தாமரைமலர்மேல் வீற்றிருக் கும் லட்சுமிதேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என்கிற பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்த தாண்டவமே ஆடுகிறான்.
இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான் பவாநந்தன் விரித்த வலையிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.
படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத்தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப்பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:
“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா? என இளைஞர்களைத் திரட் டிச் சென்று முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளை யடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின்றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.
ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.
“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம்களைக் கொல்லு! கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்” என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.
அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத்தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!” என்று பிரசங்கம்.
“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.
ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப் போழுது புரிந்திருக்க வேண்டுமே!
இதனை காலங்கடந்து புரிந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத்தேவையில்லை. அவர்கள் “ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய பாடலைக் கொண்டுவந்தது. இக்பாலின் பாடலின் பொருள், “அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா” என்பதாகும்.

எனினும், சுதந்திரம் அடைவதற்கு முந்தைய 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வங்க நாவலில் முஸ்லிம்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்காக பாடப்பட்ட அந்த “வந்தே மாதரம்” பாடல், நாடு சுதந்தரிம் அடைந்த பிறகும் இன்றைய இந்தியர்களின் ஒரு பிரிவினரை காயப்படுத்துவதாக உள்ளதால், இப்பாடல் எந்த அளவிற்கு நம் நாட்டின் ஒற்றுமையை காக்கும் என்பது கேள்விகுறியே. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.