Saturday, August 5, 2017

சத்திய ஞானசபை திருப்பணி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி”

 என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…



சத்திய ஞானசபை திருப்பணி


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு என்னும் நூலில் முதல் பதிப்பு 1996-ஆம் ஆண்டு குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் சென்னை பதிப்பித்துள்ளார்கள். அதனை ஞானசபை திருப்பணி பகுதியை மட்டும் அருட்பா பதிப்பகம் 2017-ல் மறு அச்சாக வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளதை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

          1936-ல் வயலூர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஹிந்துப் பத்திரிகையில் வயலூர் என்பதை வடலூர் திருப்பணி என்று தவறாக வெளியிட்டு விட்டார்கள். இதனைப் பார்த்த திருச்சிராப்பள்ளி என் ஆப்த நண்பர் முனிசிபல் மேனேஜர் திரு.வி.எஸ். லோகநாத பிள்ளை அவர்கள் “ஐயா வடலூர் திருப்பணியை நீங்கள்தாம் செய்யப் போகின்றீர்கள்” என்று என்னைப் பார்த்துக் கூறினார். நான் வடலூர் திருப்பணியைப் பற்றிச் சிந்திக்காத காலம், “அது நம்மால் ஆகக் கூடிய காரியமா? என்று கேட்டேன்.

          வடலூரில் வள்ளலார் மூன்று நிறுவனங்கள் அமைத்தார்கள். உடம்பு தழைக்க சத்திய தருமச்சாலையும், உணர்வு தழைக்க சத்திய வேத பாடசாலையும், உயிர் தழைக்க சத்திய ஞான சபையும் நிறுவினார்கள். இவற்றுள் சத்தியஞான சபை பழுதடைந்து விட்டது.
         
          பாலாலயம் செய்து பல ஆண்டுகளாக யாரும் திருப்பணியை மேற்கொள்ளாமல்           சத்தியஞானசபை பழுதுற்றுக் கிடந்தது. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் மற்றும் பலர் முயன்றும் திருப்பணி நடைபெறவில்லை. கடலூர் ஜில்லாபோர்டு தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் அவர்களின் தலைமையில் ஒரு திருப்பணிக் குழு அமைக்கப் பெற்றது. இடையில் அமாவாசைப் பரதேசி அவர்கள் “நான் திருப்பணி செய்வேன்” என்று சிறிது வசூல் செய்து செப்புத் தகடுகள் வாங்கி ஒரு சிறிது பணி செய்யத் தொடங்கினார். திருப்பணிக் குழுவினரிடம் வசூல் செய்த கணக்குத் தர மறுத்தார். அதனால் அத்துடன் அது நின்று விட்டது.

          அப்பொழுது திருச்சியிலிருந்து மதுரைக்கு மாறுதலாகி மதுரையில் முனிசிபல் மேனேஜராகப் பணி புரிந்த வி.எஸ்.லோகநாத பிள்ளை அவர்கள் வடலூர் வள்ளலாரிடம் அளவு கடந்த அன்பு பூண்டவர். அவர் என்னைப் பார்த்து “ஐயா! வடலூரில் திருப்பணி தொடங்கி யிருக்கின்றார்கள், நாம் ஏதாவது அதில் ஈடுபட வேண்டும்” என்று கூறி, மதுரையில் ஞாயிறுதோறும் நானும், அவரும் வசூல் செய்தோம். திருபணிக்குப் பணம் கொடுத்து வாருங்கள் என்று என்னை வடலூருக்கு அனுப்பினார். எழுநூறு ரூபாய் எடுத்துக்கொண்டு வடலூருக்குச் சென்றேன். அங்கு சத்திய ஞான சபையைப் பூசனை செய்யும் சிவஸ்ரீ பால சுப்ரமண்ய சிவாச்சாரியாரைக் கண்டு அவரிடம் தங்கினேன். பின்னலூர் வாகீசம்பிள்ளை அவர்களின் தந்தையார் திரு.கணபதிப் பிள்ளையும்    அங்கு   வந்திருந்தார்.    நான் சிவாச்சாரியாரைப் பார்த்துத் “திருப்பணிக்குப் பணம் கொண்டு வந்திருக்கின்றேன்” என்று சொன்னேன். குருக்கள் “யாரும் இங்குப் பொறுப்பாக இருந்து திருப்பணி செய்வாரில்லை. கணபதியாப் பிள்ளை என்னும் இவர் சிறந்த அறப்பெருஞ் செல்வர், உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் இவரிடம் பணம் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று கூறினார்.

          நான் அதுபடியே கணபதியாப் பிள்ளையிடம் எழுநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றேன். இவ்வாறு மாதந்தோறும் எழுநூறு, எண்ணூறு என்று எடுத்துக் கொண்டுபோய் பாலசுப்ரமண்ய சிவாச்சாரியார் மூலம் கொடுத்து வந்தேன்.

          அவருடைய மேற்பார்வையில் மூவாயிரம் ரூபாய் அளவில் ஜோதி மேடைக்குத் தூண்கள் செய்யப்பட்டன.

          மதுரையிலிருந்து முனிசிபல் மேனேஜர் ஓர் இன்ஜினியரை அனுப்பித் திருப்பணியைப் பார்வையிடச் செய்தார். அந்த இஞ்ஜினியர் வந்து பார்த்து ‘செய்த தூண்கள் பாரம் தாங்கா” எனக் கூறிவிட்டார். அதனால் செய்த வேலைகள் வீணாகி விட்டன.

          அப்பொழுது சிதம்பரத்தில் திருப்பணிக் குழுவினர் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நான் அந்தக் கூட்டத்தில் திருப்பணிக் குழுத் தலைவரைப் பார்த்து “திருப்பணியைப் பொறுப்பாகப் பார்க்க ஒருவரை நியமிக்க வேண்டும். இப்பொழுது செய்த வேலைகள் வீணாகி விட்டன” என்று கூறினேன்.

          திருப்பணிக்            குழுத்     தலைவர் கே.சீதாராம ரெட்டியார் என்னிடம் “நீங்களே பொறுப்பாக இருந்து செய்யுங்கள். ஆனால், திருப்பணிக் குழுவுக்கு உட்பட்டுச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். நான் ‘சரி’ என்று திருப்பணியை முழுப் பொறுப்பாக ஏற்றுச் செய்ய மேற் கொண்டேன்.

          வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணியைச் செய்ய முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொண்ட நான் சிற்பவல்லுனர் துறையூர் நா.செளந்தரபாண்டியப் பிள்ளை அவர்களை ஸ்தபதியாக நியமனம் செய்து, பல கொத்தனார்களை அழைத்துச் சமையல் முதலிய ஏற்பாடுகள் அமைத்துத் திருப்பணி நடைபெறச் செய்தேன்.

          விரிவுரைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் வசூல் செய்வேன். அவ்வப்பொழுது சேரும் பணத்தைக் கடலூர் சீதாராம ரெட்டியாருக்கு அனுப்புவேன். என் அன்பர் செளந்தரபாண்டியன், அவரிடம் சென்று பணம் வாங்கி வந்து திருப்பணியைச் செய்து வந்தார்.

          ஈரோடு வள்ளல் வி.வி.சி.ஆர்.முருகேச முதலியார் அவர்கள் பலமுறை ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தார். அதுபடியே நாகப்பட்டினம் திரு.பச்சைமுத்து நாடாரும் பலமுறை ஆயிரம் ஆயிரமாகத் தந்தார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் திருப்பணி நடந்தது.

          அறநிலைய ஆட்சிக் குழுவிலிருந்த ஓர் அதிகாரிக்கும், வேலை பார்க்கும் செளந்தரபாண்டியப் பிள்ளைக்கும் மன வேறுபாடு உண்டாயிற்று. திருப்பணிக் குழுவைக் கலைத்துத் திருப்பணி அதிகாரத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள வேண்டுமென்று           எண்ணிய       அவர் திருப்பணிக் குழுவைக்  கலைத்து விட்டார். கணக்குத் தருமாறு சீதாராமரெட்டியாரை அறநிலைய ஆட்சிக் குழுவினர் கேட்டார்கள். அவர் “திருப்பணியை முடித்த பிறகு கணக்குத் தருவதுதானே நியாயம்!” என்றும், “திருப்பணிக் குழுவைக் கலைத்து விட்ட பின் என்னைக் கணக்கு கேட்பது என்ன நியாயம்!” என்றும், “திருப்பணியைக் கிருபானந்தவாரியார்தான் செய்கிறார். அவரைத்தான் கேட்க வேண்டும்” என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொன்னார்.

          அறநிலைய ஆட்சிக் குழுவினர் திருப்பணியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்கள். திருப்பணி நின்று விட்டது. இதனால் எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. என் அன்பர் வி.வி.சி.ஆர்.முருகேச முதலியாரும், மன்னார்குடி சாமிநாத உடையாரும் திருப்பணி நின்றிருப்பதை அறிந்து,  வருந்தி அப்பொழுது அறநிலைய ஆணையராக இருந்த திரு.சின்னையா பிள்ளையிடம் “வடலூர் திருப்பணியை வாரியார் சுவாமிகள் செய்வது மிகவும் நல்லது” அவர் வழிபாட்டில் கண்ணீர் வடித்தால் உங்களுக்கு இருபத்தொரு தலைமுறைக்கு ஆகாது. ஆதலால், திருப்பணியை அவரிடமே ஒப்புவித்துத் திருப்பணி செய்ய உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

          பழநியில் சின்னையாபிள்ளை என்னைச் சந்தித்து, “வடலூர் திருப்பணிக் கணக்குப் பூராவும் என்னிடம் கொடுங்கள். கணக்கைப் பார்த்தபின் அதைப்பற்றி முடிவு எடுப்பேன்” என்று சொன்னார். கணக்கு முழுவதும் சின்னையா பிள்ளையிடம் ஒப்படைத்தேன். அவர்கள் அதற்கென்று   ஒரு  தனி  ஆளை ஏற்படுத்தி ஆறுமாதம் கணக்குகளைத் தணிக்கை செய்தார். இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து அதுவரை திருப்பணி நடந்துள்ளது. வசூல் செய்த வகையில் பயணச் செலவு எழுதவில்லை. ஆதலால், கணக்கு ஒழுங்காக இருக்கிறது என்று மதித்து மகிழ்ந்து கணக்கை என்னிடம் கொடுத்து, “நீங்களே திருப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்” என்று கூறினார்கள். மாதந்தோறும் வரவு செலவுக் கணக்கை அனுப்ப வேண்டுமென்று கூறினார்கள். அவ்வண்ணமே மாதந்தோறும் வரவு செலவு அறிக்கையைச் சென்னை அறநிலைய ஆட்சித் துறைக்கு அனுப்பி வந்தேன்.

               வள்ளலாரின் அருட்செயல்

          திருவாரூர் தியாகராஜாவின் விழாவில் விரிவுரை செய்ய அடிக்கடி திருவாரூர் போவேன். அவ்வாறு செல்லும்போது வடபாதி மங்கலம் திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார் அவர்கள் திருமாளிகையில் தங்குவேன். அவ்வாறு தங்கும்பொழுது வி.எஸ்.டி.. அவர்களின் தந்தையார் ஜி.ரங்கநாத முதலியாரும் அவர்களின் மனைவியாரும் நன்கு உபசரிப்பார்கள்.

          ஒருநாள் பெரிய அண்ணி அவர்கள் என்னுடைய பூஜையில் “சுவாமி மருமகளுக்குச் சந்தானம் கிடைக்கவில்லை. காசி முதல் இராமேசுவரம் வரை தெரிசித்திருக்கின்றார்கள். வைதீகச் சடங்குகள் பலவும் செய்து முடிந்தன. இந்த வீட்டில் கட்டில்கள் பல இருக்கின்றன. தொட்டில் தான் இல்லை!” என்று கூறி வருந்தினார்கள்.

          நான் முருகப் பெருமானைத் தியானம் செய்து கொண்டே “அம்மா! தாங்கள் மகனையும்,     மருமகளையும்    அழைத்துக்கொண்டு மாத பூசத்தின் பொழுது வடலூருக்கு வாருங்கள். மேட்டுக்குப்பத்தில் வள்ளல் பெருமானார் நீராடிய “பாபஹரம்” என்னும் தீர்த்தத்தில் மகனும், மருமகளும் மூழ்கி, ஞானசபையில் விண்ணப்பம் எழுதி வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ளட்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளினால் சந்தானம் உண்டாகும்” என்று கூறினேன்.

          அடுத்து வந்த ஆனிமாத பூசத்தன்று பெரிய அண்ணி அவர்கள் தன் புதல்வர் வி.எஸ்.தியாகராஜ முதலியார் அவர்களையும், அவர் மனைவியாரையும், கணக்குப் பிள்ளை ஐயங்காரையும் அழைத்துக் கொண்டு, வடலூருக்கு வந்தார்கள். மேட்டுக்குப்பம் ஓடையில் மூழ்கிச் சத்திய ஞான சபையில் விண்ணப்பம் எழுதி வைத்து அர்ச்சனை செய்தார்கள். அப்பொழுது வி.எஸ்.டி. அவர்கள் திருப்பணிக்கு ரூபாய் ஆயிரத்தொன்றைக் காசோலையாக வழங்கினார். அதே மாதத்தில் அம்மையாரின் மணி வயிறு வாய்த்தது. ஆண் குழந்தை பிறந்தது. வி.எஸ்.டி. அவர்கள் என்னைக் கண்டு “சுவாமி! வள்ளலார் எனக்கு மகப்பேறு வழங்கினார். சத்தியஞான சபைத் திருப்பணிக்கு நான் என்ன செய்ய வேண்டும்!” என்று கேட்டார்.

          நான் “அருட்பெருஞ்ஜோதி மண்டபத்திற்கு மேலே அமைக்கப்படும் மரங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று சொன்னேன். அவர் மாயூரம் எஸ்.கே.பிரதர்ஸ் கரக்கடைக்குத் தேவைப்பட்ட மரங்களை எனக்கு அளிக்குமாறு கடிதம் கொடுத்தார். அவ்வாறே மாயூரம் எஸ்.கே.பிரதர்ஸிடமிருந்து   மரம்  வாங்கிக் கொண்டேன். அதன் பில் பதின்மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய், அந்தப் பில்லை வி.எஸ்.டி. யிடம் அனுப்ப, அவர் அத்தொகையைச் செலுத்திவிட்டார்.

          ஒரு மாதம் ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் இடர்ப்பாடு வந்தபொழுது வி.எஸ்.டி. அவர்களைத் திருவாரூரில் அணுகினேன். தன் சுவீகாரத் தாயார் ஜானகி அம்மையாரிடம் கூறி மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கி வழங்கினார். கும்பாபிஷேகத்தின்போது உடன் இருந்து நடத்தினார்.

          ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார் கும்பாபிஷேகத்தின் பொழுது வி.எஸ்.டி. அவர்களையும், அவரது தந்தையாரையும் கடலூரிலுள்ள சிறந்த பங்களாவில் வந்து தங்குமாறு வேண்டிக் கொண்டார்.

          வி.எஸ்.டி. அவர்களின் பிதா திரு.ஜி.ரங்கநாத முதலியார் அவர்கள் “ஆயுள் முழுவதும் பங்களாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கும்பாபிஷேகத்தில் அடியார்கள் உண்ட எச்சில் தரையில்தான் படுப்போம்” என்று கூறிக் கடலூருக்கு வர மறுத்துவிட்டார். கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர் என்னைப் பார்த்துத் “தங்களுக்கு கதா காலட்சேபம்தான் செய்யத் தெரியும் என்று எண்ணியிருந்தேன். இந்த மகத்தான நிர்வாகத்தைக் குறைவின்றி நிறைவேற்றினீர்களே! என்று பாராட்டிக் கூறினார்.

          நான் “என்னுடைய செயலில் ஒன்றும் நடைபெறவில்லை. எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடத்திக் கொள்கின்றார்” என்று கூறினேன்.

                                                                          --- தொடரும்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.