Saturday, August 5, 2017

பொட்டி சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…

பொட்டி சுவாமிகள்



காஞ்சி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை என்ற ஊரில் கன்னட சைனிகர் சமூகத்தில் முத்து செட்டியார், போடி அம்மையாருக்கும், அவர்கள் செய்த தவ பலனாக 1824 ஆண்டு வியாழக்கிழமை மகனாக அவதரித்தார். பெற்றோர் சூட்டிய நாமம் பொட்டி செட்டியார் என்பதாகும். துறவறம் பூண்டு பிரும்மானந்த நிலையை அடைந்த காலத்தில் `பிரும்மானந்த சுவாமிகள் என அழைக்கப்பட்டார். உரிய காலத்தில் பெற்றோர் பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியர் உரைக்காமலே எல்லாம் கற்று உணர்த்தார். பள்ளியை விட்டு தம் குல தொழிலான நெசவு தொழிலில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். நெசவு செய்யும் போதும், நடக்கும் போதும் எந்த நேரத்திலும் `ஒழுவில் ஒடுக்கம் ` எனும் சாத்திரத்தை சிந்தனை செய்து கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். மணப்பருவம் வந்தபின், பெற்றோர்கள் இவருக்கு நற்குணங்களில் சிறந்த பருவம் அடையாத கன்னிகையை மணமுடித்து வைத்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் பருவம் அடைந்த மனைவிக்கு உரிய சடங்குகள் செய்தனர். சாந்தி முகூர்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குல வழக்கப்படி    மணமகளை      அலங்கரித்து அறைக்குள் அனுப்பி வைத்தனர். சுவாமிகள் முன்னமே பழகிய சாந்தி, தாந்தி ஆகிய சமாதி நிலையில் உடன்பாடாகி உடனே அறையை விட்டு வெளியேறினார். சுவாமிகள் வெளியே சென்று விட்டதை கண்டு மருண்டு மணமகள் வெளிவர, பெற்றோர்கள் நடந்ததை அறிந்து இரவு முழுவதும் தேடி கிடைக்காததால் வருத்தமுற்றனர். சாந்தி முகூர்த்த அறையை விட்டு வெளியேறிய சுவாமிகள் சேணியர் வீதிக்கு மேல் கோடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் தென்புறம் உள்ள ஒரு இலுப்ப மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்கள். தியான நிலையில் இரண்டு நாட்கள் இருந்து மூன்றாம் நாள் பிற்பகலில் தியானம் கலைந்து கோவணத்துடன் உன்மத்தம் கொண்டவர்போல் உலவ ஆரம்பித்தார். பெற்றோரும் உறவினரும் ,வீடு திரும்ப எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயிற்று. இந்நிலையில் ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் உபதேசம் பெற்று சாதனை கைவரப்பெற்றவராய் பிரும்ம நிலையில் அருள்பெற்று ஸ்ரீ பிரும்மானந்த சுவாமிகள் என்று திருப்பெயர் கொண்டு துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.

          சுவாமிகள் தான் பிறந்த ஊரிலே யாசித்து   உண்ண    ஆரம்பித்தார். வீட்டின் முன்புறம் நின்று சோறு, சோறு என்று கேட்பார். வீட்டில் உள்ள பெண்கள் சுட சுட சமைத்த உணவை தட்டில் வைத்துகொண்டு கொடுத்தால் அதில் இரண்டு அல்லது முன்று பிடி சோற்றினை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சென்று விடுவார். யாராவது வலிய அழைத்து சென்று அறுசுவை உணவு படைப்பதாக இருந்தாலும் அதற்கு உடன்படமாட்டார். எந்த வீட்டில் சோறு கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கு தான் செல்வார். தன மனைவியிடம் கூட பல தடவை சோறு கேட்டு அந்த அம்மையாரும் இறைவன்போல் எண்ணி
பக்தியுடன் அன்னம் படைப்பதும் உண்டு.

          அந்நாளில் ஆங்கிலேய சப் கலக்டர் ஒருவர் குதிரை மேல் போய் கொண்டிருக்கும் போது கோவணத்துடன் உலாவிக்கொண்டிருந்த நம் சுவாமியை பார்த்து தன பிரம்பால் அடைக்க கையை ஓங்கியபோது கை அப்படியே நின்று விட்டது. பிறகு அந்த ஆங்கிலேயர் பயந்து `தங்கள் மகிமை அறியாது தவறு செய்துவிட்டேன். மன்னித்து அருளவேண்டும் ` என்று மனமுருகி வேண்ட, கையானது பழைய நிலையை அடைந்தது.

          சுவாமிகள் உறங்கியே யாரும் பார்த்ததில்லை.முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை ஆகிய கிராமத்தில்தான் உலவி கொண்டு இருப்பார். பொடி போடும் பழக்கம் நம் சுவாமிக்கு உண்டு. யாராவது பொடி போடும் ஆசாமிகள் போனால் பொடி, பொடி என்று கேட்பார். பொடி மட்டையை கொடுத்தால் அதில் ஒரு சிட்டிகை பொடியை எடுத்துக்கொண்டு போகும் போக்கில் போட்டுக்கொண்டே போய் விடுவார்.     மட்டையை     நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் சுவாமி என்று கையில் கொடுத்தால் அதை தூக்கி வீசி விட்டு போய் விடுவார்.

          சுவாமிகள் தினம்தோறும் தான் அனுபவிக்கும் பேரானந்த சுகத்தில் தன கையால் சுடக்கு போட்டுக்கொண்டும் தொடையை தட்டிக்கொண்டும் ஆனந்தமாக கொஞ்ச தூரம் ஓடுவார்கள். பின்பு தனக்குள்ளே சிரித்து கொள்வார்கள்.

          சுவாமிக்கு வெல்லதினால் செய்த அதிரசம் விருப்பம். சிறுமதி படைத்தவர் சிலர் உளுந்து வடையை கொடுத்து, `சுவாமி இது அதிரசம் சாபிடுங்கள்` என்று கொடுக்க அது அதிரசமாகவே மாறி சுவாமி சாப்பிடுவதை கண்டு செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு வணங்கி சென்றனர்.

          சில நாட்கள், ஸ்வாமிகள் வீதியில் உள்ள பலசரக்கு கடைகளுக்குள் தாமே சென்று ஒரு பிடி வெல்லமும் ஒரு பிடி உடைத்த கடலையும் இரண்டையும் கலந்து சாப்பிட்டுக் கொண்டே செல்வார். வீதியில் உள்ள குழந்தைகள் அவர் பின்னால் சுவாமி, சுவாமி என்று கேட்டுக் கொண்டே போனால் கையில் உள்ளதை அப்படியே கொடுத்துவிட்டு சென்று விடுவார். இப்படி இவர் கடைக்கு வந்து எடுத்துப் போகும் நாளில் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். கடைக்காரர்கள் இன்று நம் கடைக்கு வர மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

          சுவாமிகள் அய்யன்பேட்டை அஷ்டலிங்க சுவாமி மடத்தில்தான் இரவு நேரங்களில் பனை ஓலை தடுக்கின் மேல் பெரும்பாலும் உறங்குவது வழக்கம். சுவாமிகள் நிலையானது கை வேறு கால் வேறாக பிரிந்த நிலையில் இருக்க உறக்கம் களையும்போது        ஒன்றாக            சேரும் அற்புதத்தை பலர் கண்டு உள்ளனர்.

          சுவாமிகளின் பிரும்மானந்த நிலையை அறிந்த பல துறவிகளும், சாதுக்களும் இவரை வலம் வந்து வணங்கி ஆசி பெற்று சென்றுள்ளனர். சாதாரண மக்களுக்கும் நோய் நீக்கியும், இடர் தீர்த்தும் அருள் செய்துள்ளார்கள். 

விதேக...முக்தி 

          இப்படியாக 91 வருட காலம் இப்புவியில் ஜீவன் முக்தராக வாழ்ந்து அருளாட்சி செய்து கொண்டிருந்த சுவாமிகளின் விதேக முக்தி அடைய வேண்டிய நேரம் வந்தது. ஆங்கில ஆண்டு 1915, சித்திரை மாதம் 29 ஆம் நாள் மங்கள வாரம் திரியோதிசி திதி, ரேவதி நட்சத்திரம் அன்று சின்ன காஞ்சிபுரம் பட்டாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுவாமிகள் சென்று சோறு கேட்டார்கள். அந்த நேரத்தில் சோறு சமைக்கப் படாததால் கேழ்வரகு கூழை சுவாமிகளுக்கு அன்புடன் படைத்தார்கள். அதை உண்டு அவ்வீதிக்கு வடக்கே உள்ள தேவ ராஜ சுவாமி குளத்தில் மூழ்கி எழுந்து ஒரு மரத்தடியில் கிழக்கு முகமாக தர்பாசனம் 
இட்டு சரீரத்தை விட்டு விதேக முக்தி அடைந்தார்கள். 

         இதை அறிந்த சைனிக சமூக மக்கள் சுவாமிகள் உடலை புஷ்ப பல்லகில் வைத்து தேவார திருவாசக கோஷ்டி பாராயணத்துடன் எடுத்து வந்து முத்தயால்பேட்டை கிராமத்தில் ஆதியில் சுவாமிகள் வீட்டை துறந்து தியானம் செய்த இலுப்ப மரத்தடியில் வைத்து சமாதி எழுப்பினார்கள். பின்னர் சிறிய ஆலயமாக கட்டப்பட்டு சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம்     அன்று    குரு   பூஜை நடந்து வருகிறது. அன்று அபிஷேக ஆரதனைகள் நடைபெற்று அன்ன தானமும் சிறப்பாக நடைபெற்று...வருகிறது.

         சுவாமிகள் சமாதியில் பொரிகடலை வெல்லம் வைத்து படைத்து பேசாத குழந்தைகள் மாறி பேசும் நிலை அடைந்ததை..பலர்..அறிவர். 

         தன துயரங்களை கூறி சமாதி முன்பு சூடம் ஏற்றி வலம் வந்தவர்கள் மன அமைதி பெற்றுள்ளனர். 


         சமாதியில் உள்ள லிங்கத்தை நோக்கி தியானம் செய்தவர்கள் உடல் நலம் பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.