Friday, May 20, 2016

கிறுஸ்து



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:


கிறுஸ்து

நீதி மொழிகள்: 1:23-33

24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இறைதூதரால் கூறப்பட்ட வாசகம் இதுவாகக் கருதப்படுகிறது. அப்போதய மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதனை இவ்வாசகம் நமக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. மக்கள் எப்போதும் நம் முன்னோர்கள் எவ்வழி சென்றார்களோ அதனை அப்படியே ஏற்று ஆட்டு மந்தை என செல்லும் குணமுடையவர்கள். அவ்வழி சரியா, தவறா என்றெல்லாம் ஆராய்வது கிடையாது. தவறு என்றால் வேறு வழியினை மாற்றவும் முயலமாட்டார்கள்.

நீங்கள் செல்லும் மார்க்கம் தவறானது. அதனை விட்டு நான் சொல்லும் மார்க்கத்தை கடைபிடியுங்கள் என்று ஒரு தீர்க்கதரிசி திடீரென அச்சமுதாயத்தில் தோன்றி கூறினால் அது அங்கு எடுபடாது. யாரும் புதிய கருத்தினை கேட்க மாட்டார்கள். மாறாக அவரை ஒழித்துக்கட்டுவதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். இயேசு பெருமான் அன்றைய சமுதாயத்தை திருத்தும்போது அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம். மக்கள் அவரை ஏற்க முன்வரவில்லை.

எனினும் அவரது காலத்திற்கு பின்பு மெல்ல மெல்ல அவரது கருத்துக்கள் உலகம் முழுதும் ஏற்கப்பட்டது. தற்போது உலகில் மிகப்பெரும்பான்மையினரின் மார்க்கமாக கிறிஸ்து இருக்கிறது.

இப்படித்தான், கடந்த இரு நூற்றாண்டிற்கு முன் தோன்றிய வள்ளற்பெருமான், இச்சமுதாயம் செல்லும் பாதை சரியல்ல, என்று ஒரு புதிய மார்க்கத்தை படைத்து அதில் பயணப்படுங்கள் உலகீர், என்று கூவி அழைத்தார். யார் ஒருவரும் அவரை எட்டிப்பார்க்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னால் சிறிய சிறிய ஆட்டுமந்தைகள் இருந்தன. ஆனால் வள்ளற்பெருமான் காலத்தில் பெரிய பெரிய ஆட்டு மந்தைகள் இருந்தன. அவைகளை ஒரு புதிய பாதைக்கு அழைத்துவர படாதபாடு பட்டார். நீங்கள் செல்லும் பாதைகள் எல்லாம் பொய்யே. அவைகளில் செல்லாதீர். என்று கூவினார். யாரும் கேட்கவில்லை. இறுதியில் "கடை விரித்தேன் கொள்வார் இல்லை, கட்டிவிட்டேன்" என்றும், "உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை" என்றும் வேதனையில் உரைக்க நேர்ந்தது.

இருநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது வள்ளலார் சம்பந்தப்பட்ட இடங்களில் ஓரளவு மக்கள் கூட்டம் சேர்கிறது. ஆனால் அவரின் மார்க்கத்தை பூரணமாக கடைபிடிப்பார் ஒருவரும் இல்லை. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து பார்ப்போம். அப்போதாவது உலக மக்கள் எல்லாம் மதங்களை விட்டு சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிப்பார்களா? என்று பார்ப்போம்.

25. என் ஆலோசனையை எல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

இயேசு பெருமானின் ஆலோசனைகளையும் அவரது கட்டளைகளையும் அன்றைய மக்கள் வெறுத்தார்கள். இரண்டாயிரம் வருடங்கள் கடந்து, அதே நிலமை வள்ளற்பெருமானுக்கும் ஏற்பட்டது. இவர் ஆலோசனை வழங்கிய ஜீவகாருண்ய ஒழுக்கம், கரண, ஜீவ, ஆன்ம ஒழுகங்கள், கடவுள் ஒருவரே என்கிற உண்மையை வெளிப்படுத்துதல், சாதிகளையும் மதங்களையும் சமயங்களையும் பொய் என்று சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் இன்றைய மக்கள் தள்ளிவிடுகின்றனர். பொய்யினை உண்மை எனவே நம்புகின்றனர்.

நாங்கள் ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறுஸ்துவையும், இஸ்லாத்தையும், இந்துவையும், சமணத்தையும், புத்தத்தையும், சீக்கியத்தையும் பின்பற்றி வரும்போது நீ எங்களது இத்தனை கூட்டையும் உடைத்து, எங்களை எல்லாம் "சுத்த சன்மார்க்கம்" என்கிற ஒரே கூட்டில் வந்து தங்கும்படி சொல்வதை எப்படி எங்களால் ஏற்கமுடியும்? நாங்கள் எல்லாம் வெவ்வேறு கலாச்சாரம், மொழிகள், நாடுகள், தலைவர்கள், சட்டங்கள், வேதங்கள், தெய்வங்கள் என்று இருக்கிறோமே! எப்படி ஒன்றிணைவது? என்கிறார்கள் மக்கள்.

தயவு ஏற்பட மேலே சொன்ன அனைத்து பிரிவுகளும் தடையாக இருப்பதாகவும் அவைகளை ஒழித்து யார்க்கும் பொதுவான "ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை" என்கிற புள்ளியில் தெரிகின்ற "அருட்பெருஞ்ஜோதி" ஆண்டவரை ஏற்று, அதன்படி மக்களை எல்லாம் ஒன்றிணைக்க வள்ளற்பெருமான் முயலுகிறார். மேலும் அவர், நம்மிடம் கொலை, புலை தவிர்க்க வேண்டும் என்றும் கடிந்துக்கொள்கிறார். நாம் அவர் கட்டளையை வெறுக்கிறோம். காலம் மாறும், மக்களும் மாற்றம் பெறுவார்கள் என நம்புவோம்.

                                                                                            தி.ம.இராமலிங்கம்.

or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.