Friday, June 10, 2016

இராமலிங்க அந்தாதி - 1001 - 1100

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

வருகின்றார் நம் வள்ளலார் உலகநிறைவாகி
இருக்கின்றார் அவர் அடிதொழுது - உருகிட
விசுவாசுவ வருடம் விளங்கிட ராமலிங்கமே
பசுபதி யாகினான் பாரீர்.


பாரீர் அருட்டோற்றம் பார்க்கவே வடலூர்
வாரீர் திரையாவும் விலகுதலால்நீர் - சாரீர்
பரபாவ வருடத்தில் புண்ணிய ராமலிங்கமே
கரமேந்தி நம்மை காப்பான்.


காப்பான் வள்ளலைக் கண்டிட நச்சுப்புழை
பாப்பான் வேதம் புறம்போகும் - கூப்பிடு
பிலவங்க வருடம் புகழோங்க ராமலிங்கமே
கலகலவென சிரிக்கக் காண்பாய்.


காண்பன யாவும் கடவுளாகி பிணைவிரகு
தூண்களாகி இருக்க துயரேது - வீணென
கீலக வருடம் கழிக்காதேநம் ராமலிங்கமே
காலனை அழிக்கும் கல்வியாம்.


கல்வியாம் இதுசாகாக் கல்வி அழகுறநம்
வல்லமை கூட்டும் வாய்மையாம் - நல்ல
செளமிய வருடம் செழித்திட ராமலிங்கமே
காமிய கன்மம் கருதான்.


கருதாத நிலையும் காண்பித்து பொதுநிலை
உருவான ஜோதியாய் அமர்ந்து - மருந்தாக
சாதாரண வருடத்தில் சமரச ராமலிங்கமே
ஆதாரமாக இருப்பான் இங்கு.

இங்கு இனிமேல் இகல்வீறு கொண்டுவாழ
அங்கங் கிருந்து அருளுவான் - மங்காத
விரோதகிருது ஒளி வருடத்தில் ராமலிங்கமே
பரோபகாரம் செய்வான் பார்.



பார்வை ஒன்றிலே பாரெல்லாம் கழிவிரக்கம்
கூர்ந்து ஒளிதேகம் ஆனவனைச் - சார்ந்து
பரிதாபி வருடத்தில் பார்க்க ராமலிங்கமே
எரியும் விளக்கில் அருள்வான்.


அருள்கிறான் பாரீர் அன்பர்க்கு நற்றலைமை
கருதி துக்கநிவாரணம் காண்பான் - பொருள்
பிரமாதீச ஆண்டில் பார்ப்பாய் ராமலிங்கமே
இரக்கத்தால் மிக அளிப்பான்.


அளித்தாய் எனையே ஆன்ம பெருமகிழ்ச்சி
ஒளியில் கலக்க உடல்கொண்டேன் - எளிய
ஆனந்த வருடத்தில் என்னை ராமலிங்கமே
வானந்த ஆதியாய் வார்த்தான்.                                                                  1010


வார்த்த புராண வேதங்களில் பெருமறம்
சார்ந்த தன்றி சத்தேதுமில்லை - கார்
ராட்சச வருடத்தில் ராஜ ராமலிங்கமே
ஆட்சி செய்வான் அன்பாய்.

அன்பினால் வளந்து அலர்ந்தது தாமரை
தன்னிலை மறந்து தானதுவாகி - நன்
நள வருடத்தில் நண்பனாய் ராமலிங்கமே
களம் கலக்கக் களிப்பாய்.

களிப்பான பொன்மை கால்பங்குடன் வெண்மை
அளித்து அதனுள் அசையும்நாயகனே -  ஒளிரும்
பிங்கள வருடத்தின் புகழ்பாடிட  ராமலிங்கமே
மங்களமாய் வருவான் மனையில்.

மனையின் நடுவில் மயிலாட கருமைவீச்சு
எனை விட்டோடி ஏழ்திரைவிலகி - உனை
காளயுக்தி வருடத்தில் காண ராமலிங்கமே
நாளெல்லாம் பேசுமுன் நாமம்.

நாமம் போற்றிடில் நமக்கு முன்னியமுடிதல்
தாமரை போல் தந்திடுவான் - ஏமம்செய்ய
சித்தார்த்தி வருடத்தில் சிதம்பர ராமலிங்கமே
உத்தமனாய் வந்து உதவுவான்.

உதவும் மனத்தவரே உத்தமனென அழலி
மதங்களும் சொல்லுமே மனிதாநீ - அதனை
ரெளத்திரி வருடத்தில் ராகமாய் ராமலிங்கமே
ஏத்திட உதவிகள்பல ஆற்றிடு.



ஆற்றுநீரில் சென்றிட்ட ஆடுபோல் கொடுமதி
சாற்றிடும் மதங்களில் சுற்றுகிறீர் - ஏற்றிடும்
துன்மதி வருடத்தில் தன்மதி ராமலிங்கமே
என்று வந்திடசுகம் உண்டு.

உண்டு உறங்கிடும் உலகீர் அருட்பாபேரிகை
கண்டு முழங்கியதைக் கேளீர் - எண்ணீர்
துந்துபி ஆண்டில் துன்பம்ஏக ராமலிங்கமே
வந்து ஏவல்செய்தாலும் வணங்கீர்.

வணக்கம் நல்லோர்க்குக்கூற வாயில்லாது ஒடுங்கி
பணத்திற்காக தீயோரிடம் பசப்புகிறீர் -  குணமாய்
ருத்ரோத்காரி ஆண்டில் ரட்சகன்நம் ராமலிங்கமே
சித்துருவாய் வருவான் சிரம்தாழ்.

சிரம்தாழ்த்தி சொல்கிறேன் சன்மார்க்க செம்மை
கரமேந்தி சொல்கிறேன் கேளீர் - இரக்கமின்றி
ரக்தாட்சி ஆண்டில் நடந்திட்டால் ராமலிங்கமே
அக்காட்சி சகியாது அழிப்பான்.                                                                 1020

அழிகின்ற மதங்களை எதிரேற்றம் கொண்டுநீ
வழிவந்திட சன்மார்க்கம் வந்திடும் - விழிப்பாய்
குரோதன ஆண்டில்  கூடிகலந்திட ராமலிங்கமே
விரோதம் போக்க வருவான்.

வருகிறார் வள்ளலார் வளங்கலன் தானேந்தி
தருகிறார் எல்லாம் தருமச்சாலையில் - அருமை
அட்சய ஆண்டில் ஆதிநாதர் ராமலிங்கமே
நட்சத்திர நாயகனாய் நடிப்பான்.

நடிக்கின்றார் என்னுள்ளே நடமது கண்டு
வடிக்கின்றேன் வாய்மை வரிகளை - மடி
சொறிந்த குண்டலி சலத்தை ராமலிங்கமே
அறிய நானும் அடைந்தேன்.

அடைக்கலம் நீயென அறிந்து உலகியல்
மடைகளை உடைத்து முயங்க - கடையை
விரித்தாய் எனக்கே வாழிஎன் ராமலிங்கமே
நரியான நானும் நாயானேன்.



நாயே என்றால் என்நாவும் நடுங்கிடும்
பேயே என்றிடவும் பயந்திடும் - வாயே
தடித்து பிறரைத் தூற்றிடாது ராமலிங்கமே
அடியேனை ஆண்டு அருள்.

அருள் வேண்டிலேன் அன்பும் வேண்டிலேன்
பொருள் வேண்டிலேன் பாராய் - இருளில்லா
உன்பெயரே எனக்கு இறுதியாக ராமலிங்கமே
என்றும் வேண்டினேன் எந்தாய்.

தாய் என்பாரும் தந்தை என்பாரும்
பொய் எனப் பேசுகின்ற - மெய்
கண்டே னென் குரு ராமலிங்கமே
எண் எட்டா னான்.

ஆனால் எனப்பேசும் இழிச் சொல்லால்
வானாள் போக்கும் வாயரை - நானால்
பாய்ச்சும் சொல் பேசினும் ராமலிங்கமே
காய் பழுத்திடாது காயும்.

காயும் மனத்திலே குளிர்நிழலென வந்து
பாயும் அருட்சுடரே பராபரமே - தாயும்
தந்தையு மாகித் தாங்குகின்ற ராமலிங்கமே
சிந்தை போற்றும் சித்தன்.

சித்தன் என்பனோ சுத்தன் என்பனோ
நித்தன் என்பனோ நிர்க்குண - முத்தன்
என்பனோ எல்லா மாகிய ராமலிங்கமே
உன் பெயருக்கு ஒத்ததேது.                                                        1030

ஒத்ததும் உயர்ந்ததும் ஒருமை உளதாகி
சத்திய சன்மார்க்க சங்கத்தின் - சித்தியை
அடையும் நாள் இந்நாளில் ராமலிங்கமே
தடை எல்லாம் தவிர்ப்பான்.

தவிர்க்க சொன்னதை தடையின்றி தள்ளி
புவியில் நானும் புனிதமாகும் - தவிப்பில்
இருக்க என் னிதயத்தில் ராமலிங்கமே
கருக் கொண்டு கலந்தான்.


கலக்கும் நாளை காணேனோ உன்னோடு
உலகம் சுற்றிமகிழ் உறுவேனோ - நலமே
நல்கும் என்காதல் நாயகன் ராமலிங்கமே
பொல்லாக் காமம் புகழ்ந்தேன்.

புகழுடல் பெற்று புன்படா மேனியினாய்த்
திகழும் சன்மார்க்க திலகமே - நிகழுமிந்த
காலத்தில் என்னோடு கலந்து ராமலிங்கமே
சீலமுமாகி ஓங்கியது செங்கதிர்.

செங்கதிர் பட்டுஎன் சங்கம் ஒளிர்ந்ததே
எங்கெங்கும் சித்தி ஓங்கியதே - சங்கொலி
சத்தம் கேட்குதே சத்தியன் ராமலிங்கமே
நித்திய னாக்கினான் என்னை.

என்னைக் காட்டி என்னிலைக் காட்டி
அன்பன் ஆக்கி எழுப்பினீர் - இன்பம்
அளித்து வினை ஓட்டிய ராமலிங்கமே
எளிமையே வலிமை என்றாய்.

என்று வருவாயென ஏக்கமுற்று நடுவே
நின்றிக்க அங்கே அசைவதை - அன்று
அறியேன் இன் றறிந்தேன் ராமலிங்கமே
வறியேனை காண வந்தான்.

வந்த பிறவிகள் வானளவு இருக்குமோ
சொந்த பிறவி சாகாதுகாண் - சிந்தா
மணிபோல் மணி மன்றில் ராமலிங்கமே
பணிசெய்ய பார்ப்பதே பிறப்பு.

பிறப்பும் இறப்பும் பிணி என்றதனை
அறவே போக்கும் அமுதே - திறமும்
தரமும் தரும் தயவெனும் ராமலிங்கமே
சிரத்தைக் காக்கும் சிகரம்.

சிகரமும் வகரமும் சன்மார்க்க சித்தியாகி
அகரமும் உகரமும் ஒன்றாகி - அகத்தில்
நிலைப்பதே சாகா நிலை ராமலிங்கமே
கலையென நாம் கற்கலாம்.                                                        1040


கற்றதனை செயலில் காணும் திறத்தை
பெற்றவனின் புகழே பெரிது - சிற்றம்
பலக் கல்வி பயின்றால் ராமலிங்கமே
துலங்கும் நிலை தருவான்.

தருகின்ற செல்வங்கள் தயவாலே பெருகி
வருகின்ற வரமுடையார் வாழ்வர் - அருஞ்
செல்வ முடையர் செல்வார் ராமலிங்கமே
கல்வி போதிக்கும் கடைக்கு.

கடை திறந்தது காத்திருப்பர் எல்லோரும்
படையெனப் பாய்ந்து பற்றுமினோ - தடை
தவிர்த்து கொண்ட தயவால் ராமலிங்கமே
கவியான அற்புதம் கூறும்.

கூறுகின்ற சன்மார்க்க கவியாலே நீவிர்
வீறுகொண்டு எழுந்து வாரீர் - ஏறுகின்ற
வடலூர் வான் வழியில் ராமலிங்கமே
நடமிடும் ஞானசபை நாடுவீர்.

நாடுமிந்த உலகமும் நன்மார்க்கர் ஆட்சி
கூடும் சன்மார்க்க காட்சிகாணும் - பாடும்
இந்தப் பாட்டும் இறவாது ராமலிங்கமே
பந்தமாக்கி பாடுமே பாரினில்.

பாரெல்லாம் இன்பமுற பரவெளி ஒளிபெற
யாரெல்லாம் நின்று யாசிப்பரோ - நீரெல்லாம்
சுத்த சன்மார்க்க சங்கத்துள் ராமலிங்கமே
சித்தம் குளிர சீர்பெறுவர்.

சீர்பெற்ற ஞானியாம் சிங்கார கல்பட்டு
ஊர்பெற்ற ராமலிங்க உறவனாம் - நேர்
சென் றழைத்து சீடனாக்கி ராமலிங்கமே
நன்னெறி அளித்த நித்தனாம்.

நித்தமும் உடனுரைந்த நெஞ்சில் நிறைந்த
உத்தமன் காரணப்பட்டு கந்தசாமி - பித்தம்
தீர்த்து பிரபந்தத் திரட்டாகி ராமலிங்கமே
சார்ந்த சன்மார்க்க சன்னதி.


சன்னதி முன்னேபொய் சொன்ன புலவர்
அன்பர் தொழுவூர் வேலாயுதத்தை -  என்
பிள்ளை இவனெனப் பெற்று ராமலிங்கமே
கள்ளம் நீக்கிஉள் கலந்தார்.

கலக்கும் கல்வியை கல்லாது நீவிர்தினமும்
மலக் கல்வியில் மாள்கின்றீர் - உலகெலாம்
ஒளியை சுற்றுவதை அறியீர் ராமலிங்கமே
ஒளியாய் இருப்பதை அறியீர்.                                                    1050

அறிந்த தெல்லாம் ஒன்றுமே அறியாத
வெறித்த தெய்வங்களே அன்றி - குறித்த
அருட்பெருஞ் ஜோதி அன்று ராமலிங்கமே
அருட் பாவில் அளித்தான்.

அளித்த அருட்பெருஞ்ஜோதியை இது வரை
களித்தார் யாரும் இல்லைகாண் - உளிபட்ட
கல்லும் கட்டையும் கடவுளோ ராமலிங்கமே
எல்லா களிப்பும் உடையான்.

உடைகின்ற மதங்கள் உருத் தெரியாமல்
முடை நாற்றத்தில் மூழ்கும்பார் - நடை
இட்டு சன்மார்க்கம் ஈன்ற ராமலிங்கமே
பட்டு தெளிந்தான் பாராய்.

பார்க்க மறையும் பழுதில்லா தேகம்
வார்க்க வடலூர் வாரும் - மார்க்கம்
அறிந்து ஒழுக்கம் ஒழுக ராமலிங்கமே
குறி என்று கடப்பாய்.

பாயிலே படுத்திடுமோ பாடையில் ஏறிடுமோ
காயிலே வெம்பிடுமோ கருவுற்று - தாயிலே
மறுபடியும் மண் மீட்டிடுமோ ராமலிங்கமே
எறும்பிற்கு அறியும்விழி ஏது.

ஏதும் அறிந்திலேனுனை ஏற்கவும் துணிந்திலேன்
மாதும் விரும்பிலேன் மண்ணாகும்நரக  - சூதும்
வேண்டிலேன் என்னை வரவழைத்து ராமலிங்கமே
கூண்டிலே அடைத்தது குற்றம்.


குற்றமும் அறியேன் குணமும் அறியேன்
மற்றதும் அறியேன் மனிதனாக - உற்றதும்
அறியேன் உலகமும் அறியேன் ராமலிங்கமே
அறியாத என்னை ஆட்டுவிப்பதேன்.

ஆட்டுவித்தால் ஆடுகின்ற அறிவும் இல்லை
பாட்டுவித்தால் பாடுகின்ற பொலிவும் - கூட்டு
வித்தால் கூடுகின்ற விதமும் ராமலிங்கமே
பித்தனெனக் கில்லை பாவியேன்.

பாவியேன் பசித்தோரை பார்க்காது மாதரை
கூவி அழைத்து கூடியக்கொடியேன் - ஆவிப்
போக அடித்துண்ணும் புலையன் ராமலிங்கமே
ஏகத்தை வணங்காத அனேகன்.

அனேகப் பாவப்பொருளில் ஆலயத் திருப்பணி
சினேகமாய்ச் செய்த சிற்றறிவன் - தானேபுகழ
தானங்கள் இடுகின்ற தரித்திரன் ராமலிங்கமே 
ஈன மலமுண்ணும் ஈயானேன்.                                                   1060

ஈயாது பொருளினை ஈயென மொய்த்தேன்
நாயாகக் குரைத்து நாடியவரை - பேயாகத்
துரத்தி சுயநலத்தில் தூர்ந்தேன் ராமலிங்கமே
இரக்கமே இல்லாத உயிரானேன்.

உயிர் நீத்தாரை உணர்வன்றி சுடுகாட்டில்
துயில் நீங்காவண்ணம் துடிக்க - மயிரென
எரித்து தகனம்செய்த எமன் ராமலிஙகமே
அரிய தேகத்தை அழித்தேன்.

அழிப்பதில் இன்பமும் அடிப்பதில் வன்மமும்
குழி பறிப்பதில் கூடிஇருக்கும் - இழிச்செயலை
அறிந்தே செய்யும் ஆணவன் ராமலிங்கமே
அறிவிலான் அறியான் அருட்பா.

அருட்பாவை உணராது இருளுரும் மதத்தை
பெருவாயன் போல் பிதற்றினேன் - தெருவுக்
கொரு கோவிலைக் கட்டியும் ராமலிங்கமே
ஒரு ஒழுக்கமும் ஓங்கவில்லை.


ஓங்குக என்றென்னை உரைப்பார் இல்லை
ஏங்கும் என்னிடம் அன்பாரில்லை - தீங்கு
செய்யினும் உயிராய் சனித்த ராமலிங்கமே
நெய்போல் எனக்கருளும் நெஞ்சம்.

நெஞ்சம் மறப்பனோ நானிலமே வெறுக்க
பஞ்சம் என்வாழ்வில் பார்க்கினும் - அஞ்சும்
மனத்தை விஞ்சும் மந்திரம் ராமலிங்கமே
என அறிந்து இன்புற்றேன்.

இன்பமுறும் பெருவாழ்வில் என்னை வைத்த
அன்பனே ஆருயிர் அருளரசனே - என்துன்ப
வாழ்வெல்லாம் இனி வாழுமோ ராமலிங்கமே
ஊழ் உலகவாதனை அற்றேன்.

அற்றவன் எனக்கு எல்லாம் பற்றவன்
கற்றவன் எனக்கு காலன் - முற்றவன்
ஓங்குக ஆளுக என்றவன் ராமலிங்கமே
தாங்குக எனைத் தாங்குக.

தாங்கும் உன்பாதத் தாமரை இதழிலே
தூங்காமல் தூங்கும் திறனை - ஏங்கும்
எனக்கே அளித்த அன்பா ராமலிங்கமே
உனக்காக என்னுயிர் உருகும்.

உருகு மென்னுயிரை உன்திரு வாயால்
பருகி உட்கலக்கப் பார்த்தேன் - இருமை
நிலை அகன்று நின்றேன் ராமலிங்கமே
அலை கலந்தநீரா யானேன்.                                                      1070

ஆனேன் என்றுபாடவே எத்தவமும் நான்
பூனேன் எவ்வுயிரையும் பணிந்து - போனேன்
அருட்ஜோதிக்கு அடிமை யாகி ராமலிங்கமே
பரமாகாசம் என்று பார்த்தேன்.

பார்த்தேன் முக்காடிட்ட பரதேகம் கண்
நேர்காண களிக்க வழிந்தனகண் - நீர்
மூச் சோட்டம் முட்டவே ராமலிங்கமே
கூச்ச முற்று குனிந்தேன்.


குனிந்து வணங்கவே காட்சி கொடுத்து
மனிதன் என்றென்னை மீட்டு - கனியச்
செய்த வான்சுடர் சுயம்பே ராமலிங்கமே
பெய் எனப் பெய்யும்மழையே.

மழையென மன்னவன் மேலிருந்து கீழ்
நுழைந் தென்னை நீட்டித்து - குழைந்து
மேல் இழுத்து மன்றில் ராமலிங்கமே 
கால் எல்லாம் கூடின.

கூடி கூத்தடிக்கும் கூத்தன் என்னை
வாடி என்றழைக்க வந்தேன் - ஓடிப்
போகவே கைப் பிடிக்க ராமலிங்கமே
ஏகாந் தத்தில் ஏறினேன்.

ஏறிய சமயமத மெல்லாம் எதையோ
கூறி கடவுளெனக் காட்டும் - ஊறிய
மக்களும் மயக்க முற்று ராமலிங்கமே
அக் கற்பனையில் ஆழ்கிறார்.

ஆழ்ந்து சமயமதமதை அறிந்தார் யாரும்
வீழ்ந்து கிடப்பதை விரும்பார் - தாழ்ந்து
அதனை நீக்கி ஓங்குவர் ராமலிங்கமே
இதனைச் செய்தார் இங்கு.

இங்கு மங்குமோடி ஏதுகண்டீர் உலகீர்
எங்குமாய் விளங்கும் அருளை - கங்கு
கரை காணாத கருத்தை ராமலிங்கமே
உரை எழுத்தா அடக்கும்.

அடக்கமும் அன்பும் அறிவார் யாரெனில்
வடலூர் மண்ணை வணங்குவா - ரிடம்
இருக்கும் இவை இரண்டும் ராமலிங்கமே
உருவாக அவரும் இருப்பர்.

இருக்கு மிந்தஉடலை என்று மிருக்கும்
அருவுரு பொருளாய் ஆளவே - கருத
உயிர் இரக்கம் உண்டாகி ராமலிங்கமே
பயிற்று விக்கப் பார்ப்பாய்.                                               1080


பார்க்கும் பொருளில்லை பார்ப்பவரு மில்லை
ஊர் உலகமுமில்லை இருப்பதெல்லாம் - ஓர்
மாமாயை அன்றி மற்றில்லை ராமலிங்கமே
சாமா றன்றிஆமா றடைந்தான்.

அடைந்த அருட்ஜோதி ஆடுஞ்சிலை நடராஜ
சடையன் என்றாலது சாலாதே - உடையன்
தனித் தலைமைப் பெரும்பதியை ராமலிங்கமே
கனிந்து புதியதாய்க் கண்டான்.

கண்ட பெரும்பதியை களிக்கப் பாடினால்
எண்ணற்ற தெய்வமும் அதன்சாயல் - கண்
தோன்றும் அதையே தான் ராமலிங்கமே
ஊன்றிப் பாடினான் உணரும்.

உணரும் பொழுதில் உண்மை தெரியும்
கணக்கி லடங்கா கடவுளெல்லாம் - மண
முறும் ஜோதியின் உடலே ராமலிங்கமே
பெறுமிந்த ஜோதியைப் புகழ்.

புகழேந்தி வரும் புலவரெல்லாம் பாடும்
அகநெறி அருட்ஜோதி இறையை - சுகம்
பெறவே நாளும் போற்ற ராமலிங்கமே
இறவா நெறியில் இருத்துவான்.

இருத்தினான் என்னை அருள் உலகத்
தெருவிலே நடக்கத் தூக்கினான் - திரு
வெல்லாங் காட்டி எனக்கு ராமலிங்கமே
கல்வி எல்லாம் கற்பித்தான்.

கற்பித்த கல்வியாய் கருணை நிறை
அற்புதச் செயலாய் ஒன்றி - தற்பத
நிலை யாய் நடிக்கும் ராமலிங்கமே
கலைகள் கடக்கக் காட்டு.

காட்டிலே உரைத்த காருண்ய பேச்சாய்
கூட்டிலே கூடாத உயிராய் - நாட்டிலே
சன்மார்க்க சங்கம் சாயுமோ ராமலிங்கமே
உன்மார்க்க மறியுமோ உலகம்.


உலகம் இன்புற உயிர் நிலைபெற்று
கலகம் போக்கிய கண்ணா - இலகும்
ஐந் தொழிலின் அரசே ராமலிங்கமே  
சிந்தை நிறைஎன் சித்தன்.

சித்தும் என்னுயிர் அத்தும் நீயெனவே
நித்தமும் நினைந்து நின்றேன் - உத்தம
அறிவை எனக் களித்த ராமலிங்கமே
எறிந்தேன் சமயமத எச்சை.                                               1090

எச்சங்கள் ஏதும் இல்லாமல் முழுவதும்
அச்ச மில்லாமல் அடைந்து - உச்சமும்
அதிலுறும் சுகமும் பெற்ற ராமலிங்கமே 
நிதி என்றுன்னை நாடினேன்.

நாடிகள் ஒடுங்கிட நாடகம் முடிந்திட
கூடி அழுதிடும் கூத்தினை - ஓடிவந்து
தடுத்திட்ட நம் தயாளன் ராமலிங்கமே
எடுத்தான் முத்தேக எழில்.

எழில் சூழும் உடலிதை சன்மார்க்க
வழிச் சென்று வளர்க்க - பழியேதும்
வாராது காண் வள்ளல் ராமலிங்கமே
நேராக இருக்க நீடும்.

நீடு வாழ்வும் நித்திய சத்திய
வீடும் பெற்று வாழ - பாடும்
பாடலை நீ பாட ராமலிங்கமே
கூட சுகங் கூடும்.

கூடுஇது எலும்புக் கூடு மண்
வீடுஇது இடியும் வீடு - ஏடுகள்
கூறு மிந்தக் கதையை ராமலிங்கமே
வீறு எய்தி வென்றான்.

வென்று வருகின்றார் வள்ளல் நீவிர்
சென்று சன்மார்க்க சங்கத்தில் - நின்று
உலகெலாம் வாழ அருள் ராமலிங்கமே
நலங்கொடு வென நவில்.


நவின்றதை நாடியே நல்லதை செய்வான்
தவித்தோர்க்கு தயவுத் தந்தையாய் - புவி
முழுதும் தோன்றி மறைவான் ராமலிங்கமே
அழுவோர்க்கு நல்ல அம்மை.

அம்மை அப்பனுமாகி அக இனத்தாரான
நம்மை காக்கும் நண்பனுமாகி - இம்மை
மறுமை எதிலும் மகிழ்ந்து ராமலிங்கமே
வறுமை போக்க வருவான்.

வருவார் எனநாம் வழிமேல் விழிவைத்து
இருக்க வந்தார் வந்தாரென - இருக்கை
கூப்பி வணங்கக் காண்போம் ராமலிங்கமே
காப்பாகும் நமக்கு கடவுள்.

கடவுளும் புத்தரும் கர்த்தரும் அல்லாவும்
கடந்த அருட்பெருஞ் ஜோதியும் - படர்ந்த
இவையாவு மானான் எங்கள் ராமலிங்கமே
சுவை பலவாகிய சுத்தன்.                                                           1100




(இராமலிங்க அந்தாதி - தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.