Sunday, February 26, 2017

2017 – ஆம் வருடம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

                               2017 – ஆம் வருடம்

முன்னம் செய்த தவப்பலனால் இவ்வுலகில் பிறந்து, இறவா வரம் வேண்டி தங்களை சுத்த சன்மார்க்க பாதையில் இணைத்து, சாதிகளையும், மதங்களையும், இனங்களையும், குலங்களையும், சடங்குகள், சாத்திரங்கள், ஆசாரங்கள் இவைகளையெல்லாம் விடுத்து சுத்தனாக, உலகியலிலிருந்து தனித்து வாழும் எம் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகியலில் இருந்துக்கொண்டே, உலகியல் சிறிதும் உளம் பிடியா வண்ணம் வாழும் முறைதான் சுத்த சன்மார்க்கம். தண்ணீரிலே தாமரை இலை இருந்தாலும் அது தனித்துதான் இருக்கும், உடலிலே உயிர் இருந்தாலும் அது தனித்துதான் இருக்கும் அதுபோல இவ்வுலகால் வருகின்ற இன்ப துன்பங்களை, நாடகத்தில் நடிப்பவன் போல் ஏற்று தனித்து நடைபயிலுங்கள். நாடகத்தில் நடிப்பது போல் என்பது இவ்வுலகிற்காக, தனித்து நடப்பது அந்த இறை அனுபவத்துக்காக என்று கொள்ளுங்கள். இறைவனின் சோதனை என்பது உங்களை பொறுத்த மட்டில் மரணம் தான். அதனால் அந்த சோதனையை அவனது அருளால் கடக்க முயன்றுகொண்டே இருங்கள். அதற்கு முக்கியம் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலைக்கொண்டு நீங்கள் இறை வீட்டினுள்ளே நுழைவீர்களாக.
வருகின்ற நாட்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் உங்கள் எண்ணங்களில் நிறையட்டும். எண்ணங்களால் செயல் ஓங்கட்டும். எங்கொரு தீமையும் உங்களை தொடரா வகை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காக்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே உங்கள் வேண்டுதலாக இருக்கட்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்தடைகள் எல்லாம் உங்களை விட்டு விலகட்டும். சுத்த சன்மார்க்கத்தின் முடிபுகள் எல்லாம் உங்களை உள்ளும் புறமும் நின்று சூழட்டும். தயவே வடிவாக உங்களது உடலும் உயிரும் மாறட்டும்.

        மேற்காணும் மலர்ச்சிகளை எல்லாம் இந்த 2017-ஆம் ஆண்டு உங்களுக்கு வாரிவழங்கும் என்று வாழ்த்தி மீண்டும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டு, தங்களது ஒவ்வொருவரின் வாழ்த்துக்களும் அருட்பெருஞ்ஜோதியின் வாழ்த்துக்களாகவே நானும் ஏற்று உங்களுடன் நடைபயில்கின்றேன்.

        சன்மார்க்க விவேக விருத்தியின் சார்பாக நமது வள்ளற்பெருமானும் அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்களும், கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுதனார் அவர்களும் என்றும் நம்மை வாழ்த்திக்கொண்டே இருக்கின்றார்கள். நாமும் அவர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். நன்றி.
  

-தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.