Sunday, February 26, 2017

எண் ஜோதிடம்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

எண் ஜோதிடம்
=============
இந்திய (இந்து) மக்களின் மூட நம்பிக்கைகளில் ஜோதிடம் முதன்மையானதாக உள்ளது.  ஜோதிடங்களில் பல வகை உண்டு, வான் ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், எலி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், ஓலைச்சுவடி ஜோதிடம் என்று பலதரப்பட்ட வகைகள் உண்டு. ஜோதிடம் என்றாலே அது பொதுவாக வான் ஜோதிடத்தையே குறிக்கும். இந்த வான் ஜோதிடத்தைப் பற்றி நாம் சென்ற மின்னிதழில் கண்டோம். தற்போது நாம் எண் ஜோதிடம் (Numerology) பற்றி காண்போம்.

எண் ஜோதிடத்தை பொறுத்தவரை உலகலாவிய அளவில் இதனை அனைத்து தரப்பு மக்களும் நம்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கிடையே எண்களின் பலன்கள் வெவ்வேறு விதமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சீனாவில் 7 என்கிற எண் நல்லது என்று நம்பப்பட்டால், அமெரிக்காவில் அதே 7 என்கிற கெட்டதாக நம்பப்படுகின்றது. இப்படி நாட்டுக்கு நாடு எண்களுக்குண்டான ஜோதிட நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு உண்மையாகத் தோன்றுகின்றது.

இப்படிப்பட்ட எண் ஜோதிடம் சமீப காலமாகவே தோன்றி வளர்ந்துள்ளது என அறிகிறோம். சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாகத்தான் இவை தோன்றி வளர்ந்திருக்கும் எனத் தோன்றுகின்றது. எனினும் நமது தமிழகத்தை பொறுத்தமட்டில் சங்ககாலத்திலேயே எண் ஜோதிடம் தோன்றியிருக்குமோ? என எண்ணத்தோன்றுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது தமிழ் மறையான திருக்குறலில் கூட,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
 கண்ணென்ப வாழ்ம் உயிர்க்கு.

என்று எண்களின் முக்கியத்துவத்தை கூறியிருக்கின்றது. எனினும் இக்குறள் ஜோதிடத்தை குறிப்பதாக சொல்லிவிட முடியாது. இதுபோல்,

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்பதில் வருகின்ற நான்கு என்பது நாலடியார் என்கின்ற நூலையும் குறள் வெண்பாவையும் குறிக்கும். எனவே நாலும் இரண்டும் என்பதும் ஜோதிடத்தை குறிப்பதல்ல. எனினும் சங்க கால நூல்களின் பெயர்களை பார்த்தோமானால் 4, 40, 400, 4000 என்று நான்கினையும் நான்கின் வர்க்கத்தையும் காணமுடியும். நான் மணிக்கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை எல்லாம் நான்கின் மயம்தான்.

        நாலடியார், நான் மணிக்கடிகை, சதுர் அகராதி, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, புற நானூறு, அக நானூறு, நற்றினை நானூறு, குறுந்தொகை நானூறு, பழமொழி நானூறு, நாலாயிர திவ்யப் பிரபந்தம், நாலாயிரக்கோவை இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டே தமிழில் எண்களின் பெயரில் நூல்கள் இயற்றப்பட்டு அவ்வெவ்வெண்ணிக்கையில் பாடல்களை இயற்றி முடித்துள்ளனர் நமது தமிழர்கள்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது, முப்பால், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு என்று எண்களின் பெயர்களில் நூல்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட எல்லா நூல்களையும் தொகுத்து வழங்கும்போதும் அவைகளுக்கும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ் கணக்கு, என்று எண் பெயராகவே வைத்ததால் பழந்தமிழர்களுக்கும் நியூமராலஜி தெரிந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேத காலத்திலும் தசம், சதம், சஹஸ்ரம் என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வருகின்றன. யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் என்று சிவன் பெயரில் முக்கியமான ருது வருகின்றது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களின் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

சமஸ்கிருதத்தில் தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வருகின்றன. பதிகம், சதகம், சஹஸ்ர நாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று வருகின்றன. பஞ்ச ரத்னம், அஷ்டகம் என்று ஐந்துக்கும் எட்டுக்கும் வேதத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழர்களும் சங்ககாலத்தில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று சபைகளை அமைத்து இதே ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோரும் குறிப்பிட்ட சில எண்களின் மீது ஏதோ ஒரு காரணம் கொண்டு காதல் புரிந்துள்ளனர்.

சங்ககாலத்தவர்கள் தாம் இயற்றிய நூல்களில் சில எண்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அம்முக்கியத்துவம் ஜோதிட ரீதியாக இருந்திருக்க முடியாது. ஆனால் இக்காலத்தவர்கள் ஜோதிட ரீதியாக எண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாம் வாங்கும் வாகனங்களின் பதிவெண்கள், தாம் கட்டும் வீட்டு மனைகளின் எண்கள், தாம் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதிலும் எண்கள், பழையப் பெயரை நீக்கிவிட்டு புதியப் பெயரை வைப்பதிலும், எண்களை ஜோதிட ரீதியாக பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

தமிழ் எழுத்துக்களுக்கு ஜோதிட எண்கள் அமைக்காது, ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டும் ஜோதிட எண்களை அமைத்து அதன் கூட்டுத்தொகை எண்ணை கர்த்தாவாகக் கொள்கின்றனர். இதனை உருவாக்கிய அந்த புத்திசாலி ஆசிரியர் யார் எனத்தெரியவில்லை.

A, I, J,Q,Y = 1
B,K,R = 2
C,G,L,S = 3
D,M,T = 4
E,H,N,X = 5
U,V,W = 6
Q,Z = 7
F,P = 8

மேலே குறிப்பிட்டவாறு ஆங்கில எழுத்துகளுக்கு ஒன்று முதல் எட்டு வரை ஜோதிட எண்களை அளித்துள்ளார்கள். இதனைக்கொண்டு நாம் நமது தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எழுதி நமக்கான கர்த்தா எண்களை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது பிறந்த குழந்தைகளுக்கு ஜோதிடம் கணித்து அதற்கு தக்க எண்களில் பெயர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக தற்போது நிறைய எண் ஜோதிட பெயர்கள் வலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றது.

உதாரணமாக ப.கண்ணன் என்கின்ற தமிழ்ப் பெயரை P.Kannan என்று எழுத வேண்டும். இதில் அமைந்துள்ள ஆங்கில எழுத்துக்காண ஜோதிட எண்களான 8+2+1+5+5+1+5=27=2+7=9. இப்படி ப.கண்ணன் என்ற பெயருக்கு அமைந்த ஜோதிட எண் ஒன்பதாக வகுக்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட ஜோதிட எண்களால் தற்போத தலைமுறை நமது பாரம்பரியத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டது. தமிழில் பெயர்கள் வைக்கப்படுவதே இல்லை. பாம்பு சீறும் சப்தம் போன்று ‘ஷ்….ஷ்…’ என்று சப்தம்தான் தற்போதய குழந்தைகளின் பெயர்களில் ஒலிக்கின்றது. தமிழ்ப் பெயர்கள் அழிய இந்த எண் ஜோதிடம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தாத்தா பாட்டியின் பெயரினை பெயரனுக்கு பேத்திக்கு வைக்கும் நடைமுறைகள் இன்று முற்றிலும் அழிந்துவிட்டன. வாயில் நுழையமுடியாத வடச்சொல்கள் எல்லாம் இன்றைய தமிழர்களின் குழந்தைகளுக்கு பெயர்களாக அமைக்கப்பட்டுவருகின்றன. அதனையே பெற்றோர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். நமக்கு தேவையான பாரம்பரியத்தை விட்டுவிட்டு தேவையற்ற பாரம்பரியத்திற்காக இன்றைய இளைஞர்கள் போராடுகின்றார்கள்.

எண் ஜோதிடம் என்கின்ற முட்டாள் தனமான நம்பிக்கைகளை மிகவும் படித்து நல்ல சமுதாய அந்தஸ்தத்தில் உள்ளவர்களால்தான் பெரும்பாலும் பின்பற்றப்பட்டுவருகின்றது. இது கிராம மக்கள் வரை சென்றடைந்துவிட்டது. இந்த முட்டாள் தனம் இப்படியே தொடர்ந்தால், இந்த எண் ஜோதிடத்தால் தமிழக மக்கள் தங்கள் அடையாளங்களை இன்னும் இருபதே வருடத்தில் முற்றிலும் இழப்பார்கள். வாகனப்பதிவிற்கும், வீட்டு மனை எண் அமைவதிலும் பெரும் பணத்தை செலவிட்டு ராசி எண்களை வாங்குகின்றார்கள். நாம் சுரண்டப்படுகின்றோம் என்பதனை யாரும் அறிவதில்லை. அவர்களது அறிவு மூடப்பட்டு மூட நம்பிக்கை ஓங்குகின்றது.

சன்மார்க்க மக்களாகிய நாம் இப்படிப்பட்ட மூட வழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதோடு, நம்மைச் சார்ந்த மற்றவர்களையும் அதிலிருந்து மீட்டெழச் செய்யவேண்டும். கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக வேண்டும் என்ற வள்ளலாரின் கட்டளையினை நிறைவேற்றுவோம். 

                                --தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.