Sunday, February 26, 2017

சத்விசாரம் - ஆன்மாவும் இறைவனும்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

சத்விசாரம்
========

ஆன்மாவும் இறைவனும் ஆதி அந்தம் இல்லாத அனாதி என்றால், இதில் ஆன்மா மட்டும் ஏன் ஜடமான இவ்வுலகில், உடல் கொண்டு பிறந்து இன்ப துன்பங்களை  அனுபவிக்க வேண்டும்?

தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும்! என்ற நினைப்பில் இக்கேள்வி என்னுள் எழுந்திருக்கலாம். இதற்கான பதில் என்னவென்று பார்ப்போம்…

‘பரோபகாரம்’ மற்றும் ‘சத்விசாரம்’ என்ற இவை இரண்டும் சுத்த சன்மார்க்க சாதனங்கள் ஆகும். இதில் சத்விசாரம் என்பது கடவுளினது  புகழையும் ஆன்மாவின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது ஆகும். அவ்வகையில் ஆன்மாவும் இறைவனும் அனாதிகள் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ஆன்மாவின் தரம் என்ன? என்று விசாரித்தறிய வேண்டும்.

ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று மலங்கள் உண்டு. இம்மூன்றில் ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் ஆன்மாவிற்கு உண்டு. இறைவன் முற்றிலும் மலம் நீங்கியவன். எனவே ஆணவம் என்கின்ற மலம் நீங்கும் வரை ஆன்மாவிற்கு பிறப்பு உண்டு. எந்த ஆன்மா தமது ஆணவத்தை நீக்குகின்றதோ அன்றே அவ்வான்மா இறைவனாகிவிடுகின்றது. ஆக, இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையில் இருப்பது ஒரே ஒரு மலம்தான். அம்மலம்தான் நம்மை இந்த பாடுபடுத்துகின்றது. இந்த ஒரு மலத்துடன் இருந்த நமது ஆன்மா பிறப்பெடுக்கும்போது முற்றிலும் மலமுடையதாக அதாவது மேற்காணும் மும்மலங்களும் உடையதாக ஆகிவிடுகின்றது. இதனால் மேலும் இவ்வுலகில் இன்னல்களை நாம் (ஆன்மாக்கள்) அனுபவிக்க நேரிடுகின்றது.

ஆன்மாவிற்கு மட்டும் மலம் ஏன் வந்து சேர்ந்தது? இறைவனுக்கு ஏன் மலமில்லை?

அதுதான் இயற்கையின் விளையாட்டு. இயற்கையிலேயே ஆன்மாவிற்கு ஆணவ மலம் உண்டு. இறைவனுக்கு யாதொரு மலமும் இல்லை. இயற்கை என்பது ‘அமைப்பு’ என்று சொல்லலாம். ஆதியும் அந்தமும் இல்லா அனாதி நிலையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதை இயற்கை என்கின்றோம்.

செம்பிற் களிம்பு இயற்கை. அதுபோல் ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை. செம்பில் இயற்கையாக அமைந்துள்ள களிம்பை வேதித்து நீக்கினால் அச்செம்பு தங்கமாகிவிடும். அதுபோல் இந்த தேகத்தில் உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவ மலம் நீங்கினால் இந்த தேகம் சுத்த தேகமாகிவிடும். இப்படிப்பட்ட சுத்த தேகம் எடுக்கவே ஆன்மாக்கள் இப்படிப்பட்ட பூமிகளில் பிறப்பை எய்துகின்றன. எப்படி செம்பில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு மனிதனால் அச்செம்பு வேதிக்கப்படுகின்றதோ, அவ்வாறு நமது ஆணவ அழுக்கை எடுக்க இறைவனால் நமது ஆன்மா வேதிக்கப்பட வேண்டும். இறைவனின் அருள் இல்லாமல் ஆன்மாக்கள் வேதிக்காது. சுத்த தேகம் எடுக்காது. அதானால் இறைவனின் அருள் பெற இடைவிடாது நாம் ஜீவகாருண்ய செயலில் ஈடுபட வேண்டும்.

மனித வல்லபத்தால் ஆன்மாவில் உள்ள மலங்களை எடுத்துவிட முடியாது. இது நல்லது… இது கெட்டது… என்று சிலச் செயல்களை தடுக்க முடியுமே தவிர, செயல்களே (கன்மம்) இல்லாமல் செய்துவிட முடியாது. இறைவனின் அருளொளி ஆன்மாவிற்கு கிடைத்துவிட்டால் உடனெ மலங்கள் யாவும் நீங்கி பொன்னுடம்பு பெறும்.   

இறைவன் பிறந்து வருவதை அவதாரம் என்கின்றோம். அப்போது மட்டும் இறைவனினடம் எவ்வாறு மலங்கள் ஒன்றின?

மேலே கூறியதுபோல், இயற்கையிலேயே ஆன்மாவிற்கு மட்டுமே மலம் உண்டு. இறைவனுக்கு கிடையாது. அதனால் மலமுடைய ஆன்மாக்கள் மட்டுமே பிறப்பை எய்தும். மலங்கள் இல்லா இறைவன் ஒருபோதும் பிறப்பதில்லை. அவதாரம் என்பதெல்லாம் தத்துவம் சம்பந்தமுடையது. கற்பனைக் கதைகள் அவ்வளவே. இயற்கையை மீறி இறைவனிடம் மலங்கள் ஒன்றினையாது. ஆன்மாக்கள் சுத்த உடம்பாகியதும் இறைவனாகிவிடும். ஆனால் இறைவன் ஒருபோதும் ஆன்மாவாக முடியாது.


--தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.