Sunday, February 26, 2017

பிக்குகள்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017-ஆம் மாதம் வெளிவந்தவை:

பிக்குகள்
========
 
ஏகாந்த இடத்தில் வசித்து, மன அமைதி பெற்று, உலகத்தின் உண்மை நிலையைக் காண்கின்ற, நற்காட்சி அடைந்துள்ள பிக்குவானவர், மனிதரால் காண முடியாத இன்பத்தை அடைகின்றார்.

ஓ பிக்குகளே! மல்லிகைச் செடி வாடிய பூவை உதிர்த்து விடுவது போல, ஆசைகளையும் வெறுப்பையும் (ராகத் துவேஷங்களை) உதிர்த்து விடுங்கள்.

ஞானம் (அறிவு) இல்லாதவருக்குத் தியானம் (மன அடக்கம்) இல்லை. தியானம் இல்லாதவருக்கு ஞானம் இல்லை. யார் தியானமும் ஞானமும் உள்ளவரோ அவர், மோட்சத்தின் அருகில் இருக்கின்றார்.

பிக்குவே! சிந்தித்துப்பார். அசட்டையாயிராதே. காம எண்ணங்களில் உன் மனத்தைச் சுழல விடாதே. அசட்டைத்தனத்தினாலே, பழுக்கக் காய்ந்த நெருப்பைக் கக்கும் இரும்பு உருண்டைகளை விழுங்காதே. அது சுடும்போது ‘இது துக்கம்’ என்று கதறாதே.

பிக்கு ஒருவர், தன்னுடைய ஊதியம் சிறிதாக இருந்தாலும் அதை இகழாமல் இருப்பாரானால், தேவர்களும் அவரைப் புகழ்கிறார்கள். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை தூய்மையானதாகவும் ஊக்கமுள்ளதாகவும் இருக்கின்றது.

பிக்குவாக உள்ள ஒருவர் தமது சொந்த லாபத்தை அலட்சியமாக எண்ணக்கூடாது. பிறருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படவும் கூடாது. மற்றவருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப் படுகின்றவர் சமாதி (மன அடக்கம்) பெறமாட்டார்.

தர்மோபதேசப்படி நடந்து, தர்மோபதேசத்தில் மனம் மகிழ்ந்து, தர்மோபதேசத்தை என்னேரமும் சிந்தித்துக் கொண்டு, தர்மத்தை மறவாமல் இருக்கின்ற பிக்கு, உண்மையில் தர்மத்திலிருந்து தவற மாட்டார்.

புத்தருடைய உபதேசங்களில் மனத்தைச் செலுத்துகின்ற இளைய பிக்குவானவர், மேகத்திலிருந்து வெளிப்பட்ட வெண்ணிலாவைப் போன்று உலகத்தில் ஒளிவிட்டு விளங்குகின்றார்.

ஒருவர் தானே தனக்குப் புகலிடமாம். ஒருவர் தானே தனக்கு எதிர்கால வாழ்க்கையை நியமிக்கின்றார். ஆகையினாலே குதிரை வாணிகர் உயர்ந்த இனத்துக் குதிரையை அடக்குவது போல, நீ உன்னிடமுள்ள ‘நான்’ என்பதை அடக்கு.

உடல் அடக்கம், வாக்கு அடக்கம், மன அடக்கம் உடையவராய் இவற்றில் நன்கு பயின்று பாவங்களை நீக்கினவர் யாரோ அவர் ‘உபசந்தர்’ என்று கூறப்படுகின்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.