Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 2

இந்துமதம் எங்கே போகிறது? - 2
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)

பிராமணர்கள் பதில் சொன்னார்கள். 'குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு சேஷமம் கிடைக்கும்' என்று. புத்தர் திரும்ப கேட்டார்,

"ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே... எல்லாம் அறிந்த பிராமணர்களாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா?... அந்த அக்னி குண்டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கி போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா?...

ப்ராக்ருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டு போனார்கள். பிறகு...?

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது... மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த "அக்னி குண்ட" மோட்சம் வேண்டாமா?...

--- என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட... யாகத்தை விட பெருநெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி ஆலமரம் சாயுமா?... ஆலமரம்போல் வேர்களையும், விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.

முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது... பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்... தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை தேர்ந்தெடுத்தார்.

புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கேறிய தேகம்... முன்னேறும் கண்கள்... ஓயாத சிந்தனை, தனக்கே உரிய குணங்களை பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.

எங்கேனும் வேள்விச்சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர் படை. யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களை அணுகியது... "பாரப்பா... இப்படி உயிர்களை பலி கொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான். பொருட்செலவுதான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.

நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளர்த்து வா. அது இறந்து கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை..." - ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக் கேட்ட யாகம் நடத்துபவர்கள்... உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் "யாகம் நடத்தமாட்டோம்" என புத்தரிடம் உறுதி தந்தனர்.

புத்தர் நடந்தார். வீடு வீடாய் சென்றார். இப்போது தேர்தல் வந்தால் கட்சிகாரர்கள் வீட்டு எண்களை பார்த்துப் பார்த்து கும்பிடுவார்களே... அதே போல, ஆனால் பதவியை எதிர்பாராமல் ஒவ்வொரு வீடாய் புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களை போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள்.

இதுதான் புத்தோபதேசம்.

இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்துவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன.

"Don't pour innocent matters into the fire. God wants your love only"

ஒன்றும் அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார். - என கிறிஸ்துவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே வீடு வீடாய் சென்று சேர்த்தவர் புத்தர்.

'Anti Vedic' வேத எதிர்ப்பு கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர்.

என்ன செய்யலாம்...? மொட்டையடிக்கலாம். ஆடையை குறைக்கலாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல்... மனசிலிருந்து ஆசையை களையவேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.

தன் குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையை பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது.

எங்கே போவது...?

உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள் என (Buddhist Monks) பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள்தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன. மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங்களும்... சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர காரணமே... அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்ததுதான் காரணம் என ஒரு வரலாற்று குறிப்பும் உள்ளது.

புத்தர் காலத்துக்கு பிறகும் அவரது ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர்.

பிராமணர்களின் மிகப்பெரிய பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வதுதான். ஆங்கிலத்தில் "Adoption" என சொல்வோமே...

புத்த இயக்கத்திடமிருந்து... ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்.

இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே.... இதுபோன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பெற்றார்கள் பிராமணர்கள். மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர்.

பிறகு?...

புத்தம் சரணம் கச்சாமி... தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.

இங்கே தமிழ் பண்பாடு.... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.

1. கல்லை வழிபடுதல் - Fitish worship
2. விலங்குகளை வழிபடுதல் - Totomism worship
3. மனித உரு செய்து வழிபடுதல் - Shamnaism worship
4. விக்ரகம், சிலை செய்து வழிபடுதல் - Idol worship

நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன. தமிழ் நாகரிகமே சிற்பக்கலையில் தேர்ந்து... விளங்கியது.

பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்தி வந்தனர்.

வழிபாடு என்றால்?...

தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்படுவதுதான் தமிழனின் முதல் வழிபாடு.

பூ + செய் = பூவால் செய் = இது இணைந்துதான் பூசெய்... பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.

இதனை திராவிட மொழியில் ஆராய்ச்சியாளர் எஸ்.கே.சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக்காட்டுகிறார்.

வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. "நீ உன் கணவனிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு" என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.

"நாயக - நாயகி பாவம்" என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம் தான்.

இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உரு வகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது தமிழ்ப் பண்பாடு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது. நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்துவிட்டது.

வட இந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவை தொடுகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. புத்தர் இனத்தவர்கள் தமிழனத்தவரோடு 'சம்மந்தி' உறவுமுறை வரை நெருங்கிவிட்ட நிலையில்...

பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலைதூக்கின.

பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது பூண்டிருந்த நூல்... அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)... பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.

என்ன இது?... என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள், "சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப்பட்டிருக்கும் அந்தஸ்து..."

ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈடுபட்டிருக்கும்போது... வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி. அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈடுபடும்போதும் அடிக்கடி அமர்ந்து எழுகின்ற போதும்... வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்... இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.

இதேபோல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது. அதுவே பூணூலானது.

இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.

சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது. மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்... கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன, இந்த மகா கொள்கைகள். இந்த மாற்றங்கள் நடந்த பிறகு... தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது. இங்கேயுள்ள மிகச்சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்... "இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்திரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன்" என்றனர்.

பூசெய்... "என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தனர் பிராமணர்கள். என்னென்ன?...

தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூசை (பூசெய்) எப்படி பூஜையானது என பார்த்தோம். இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவ சிலைகளை வடித்தனர். சிறுசிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர். அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...

'ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு...' என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்.... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்க சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்... என்பது நம்பிக்கை.

இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான். 'நாம் நமக்குள் பேசுவது போல பேசிக்கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் க்ரீம் ப்ரீம்... என அடிவயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும்' என்றான். இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள்.

எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங்கைகளையும் பிணைத்து... 'இனி உங்களை தாக்க மாட்டோம்' என அடிபணிந்தனர்.

அதுபோல வைத்துப்பாருங்கள். கும்பிடுவதுபோல் தோன்றும். அந்த 'தாஸே' இனப்பெயரிலிருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது.

தங்களை அன்று கும்பிட்ட 'தாஸே' இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக்கொடுத்தனர் பிராமணர்கள். கடவுளுக்காக கைகூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.


"நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்?"

to be continue....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.