Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 9

இந்துமதம் எங்கே போகிறது? - 9
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
                  
          நான் இப்பிரச்சாரங்களில் மிகத்தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப்பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப…

          என் இளமைப் பருவத்தின் ஒரு காலைவேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன். ‘தாத்தாச்சாரீ… வாரும்… உட்காரும்…’ என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார்.

         
          “வாரும் தாத்தாச்சாரீ… நன்னா இருக்கீரா?... உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா… தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமா… உடம்பை பார்த்துக்கோங்கணும்…”

          என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார் சங்கராச்சாரியார்.

          சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணனுமே ஸ்வாமி… அதான் அங்க இங்கேனு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலயே இருக்கேன்.

          என நான் பதில் சொல்ல… எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.

          நானும் சளைக்காமல் போன வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம்  ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.

          எனது அனபவங்களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர்… ‘ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்… இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்’ என விடை கொடுத்தார்.

          அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.

          நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு…!

          ‘என்ன ஓய்… நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்… ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே… இதெல்லாம் நன்னா இருக்கா…” என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.

          இதெல்லாம் நன்னா இருக்கோ?... என பார்ப்பதற்கு முன்… ‘அதென்ன ஆச்சார்ய புருஷன்?’… என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.

          ஒரு சமூகத்தில், அதாகப்பட்டது அந்த கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தனாவாதிகளுக்குத்தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது… அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.

          இதுபோல் அனைத்து சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற்சிலர்தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகலமரியாதைகளையும், கெளரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கின்றார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள்தான் ஆச்சார்ய புருஷர்கள் என அழைக்கப்பட்டனர்.

          அப்படி ஓர் ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்ததுதான் எனது குடும்பமும், அந்த ஆச்சார்ய புருஷரின் வம்சாவழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.

          அதே நேரம்… வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கின்றார்கள். சிலர்தான் அந்த ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.

          உதாரணத்துக்கு… ஸ்ரீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பரம்பரையில் பிறந்து  வந்ததின் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கின்றார்கள். உண்மையில் ‘பாஷ்யம்’ பற்றி இவர்களுக்கு தெரிந்தது பூஜ்யம் என்றாலும் கூட இவர்கள்தான் இன்று பாஷ்ய சிம்மாசனாதிபதிகள். 

ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகாபெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

          அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கெளரவக் குறைச்சல் இருக்க முடியுமா?... அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.

          அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.
         
          அப்படி ஒரு தடவை சந்தித்தபோது… “முதலில் நாம் நம்மை சுத்தப்படுத்திக்கணும் இல்லையா?... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும்… அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்ய வேண்டும்… ஏதாவது சொல்லுங்களேன்… என்றார் மகா பெரியவர்.

          நான் சொன்னேன்.

          “நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கின்றோம். டி.கே.ஜெகந்நாதாச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட பிராமணன், தார்மீக ஹிந்துனு பத்திரிகைகள் நடத்றார். நாங்களும் பேசி எழுதிதான் வருகின்றோம். என நான் சொன்னேன்.

          பதிலுக்கு மகா பெரியவர்…

          “அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரி… ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா?... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு… ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.

          மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யனும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்… நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்” என்றார்.

          இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது. குளித்தலை அண்ணா அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள். அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய அவர்களோடு நானும் புறப்பட்டேன்.

          “பிராமணர்களை திருத்தினால், நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்…” என நம்பிய மகா பெரியவர், இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.

          அது என்ன பலனை கொடுத்தது?...

          மகாபெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது.

          “வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா… அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (Vedic spirit) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்… பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா?... என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

          எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க… எதற்கு ஆவஹந்தி ஹோமம்?... அப்படியென்றால் என்ன?...

          ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (demands) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆவஹந்தி ஹோமம்… ப்ரம்ம தேஜஸ் – க்காக நடத்தப்படுகின்றது.

          புனித கலசத்தை நிறுவி… அதன்மேல் வேதங்களை தொகுத்த வியாசரை போற்றி துதி செய்து… அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம்.

          அஃதாவது… அன்னத்தை கொடுத்து… வியாசரின் வேத அறிவையும் கொடுத்து ‘ப்ரம்ம தாஜஸ்’ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் பிராமணியத்தின் பலத்தை என குறிப்பிடப்படும். ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.

          இப்போது புரிகின்றதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடித்ததும்… பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.

          அப்போது… கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன்கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.

          இந்த வசதிகள், ஒன்றுகூட, இல்லாவிட்டாலும் அப்போது மகாபெரியவரின் ஆசீர்வாதம், எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக, தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமைய்யர் பெரும் பொறுப்பு வகித்தார்.

          இப்படியாக இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.

          தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் ஆவஹந்தி ஹோமமும் பண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது?

          இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான். செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.

          அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி… அகமதாபாத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வடஇந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.

          அதற்கு கிடைத்த சம்பாவனை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம்.

          இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம்… நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே.நீலமேகம்.

          கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது…

          ஸ்வாமி… பார்த்தீரா… எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்” என்பார்.
                  
          கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன். இந்நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.

          இது மகாபெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். “தாத்தாச்சாரீ… நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.

          அதுக்கு அடுத்ததா...அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால… நாம் பூஜா தத்துவத்தையும்… சிற்ப சாஸ்திரங்களையும் பத்தி எல்லோருக்கும் புரிய வச்சாகணும்… என்ன சொல்றீர்?... என்றார்.

          “வாஸ்தவம்தான் ஸ்வாமி… இந்த “அவேர்னஸ்” (Awareness) பிராமணர்களுக்கும் வரணும்… மத்தவாளுக்கும் வரணும்…” என்றேன்.

எங்களின் சிலநாள் அலோசனைகளுக்குப் பிறகு… ஆகம சிற்ப சதஸ்.

அதென்ன ஆகம சிற்ப சதஸ்?

ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.

விக்ரகங்களை… தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்ரங்களை சொல்லிக்கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.

சிற்பம்?... இன்றும் நாம் கோயில்களுக்கு செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச்சிறப்பு. நீங்கள் வடஇந்திய கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப் போல நுட்பமும், அழகும் ஒருசேர வாய்த்திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டிவைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறுசிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக்காட்டும்.

இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஆஹம சிற்ப சதஸ்.

இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா.கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.

ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?

கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம், பூஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிராகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.

கோபுரத்தின் அழகு, பிராகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்கிரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.

இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல… நான் உங்களிடமும் சொல்கிறேன்.

ஆதிகாலத்தில்… அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும் வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை “விஸ்வகர்மா”வாக வந்து வடிவமைத்தது போல, அவருக்கு நாம் சிற்பங்களை சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் “விஸ்வகர்மா”வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்க வேண்டும்.”

        என ஆகம சிற்ப சதஸ் –சின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆகமங்கள் அறிந்த பட்டாச்சாரியார்களையும் அழைத்து வந்து அக்கூட்டங்களில் பேசவைத்தோம். இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.

        சனாதன தர்மசபையில் ஆரம்பித்து… வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆகம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.

        திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒருநாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். “ஏன் தாத்தாச்சாரியாரே… நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாசம் பண்றோம். ஹோமம் பண்றோம்… ஆனா… பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே…”என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

        நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே! ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள், இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?...

        திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

        “இதப்பாரும்… எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை.. திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாசங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும் ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ். என்ன சொல்றீர்?”

        என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்கு புலப்பட்டது.

        நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தபோதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

        அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

        “ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?” என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு அதற்கு நான் சொன்னேன்.

        “உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?... புரிந்து நடந்து கொள்…” என்றேன்.

        அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…?

        “நீங்களும் மகாபெரியவரும் ஏன் சமஸ்கிருதத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்… ஸ்நானத்தை முடிச்சு போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்…?”

        …மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள். சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்கு சொல்வதற்கு முன்… மகாபெரியவர் “திருப்பாவை-திருவெம்பாவை” என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்டவழியில் சொல்கிறேன்.

        தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்கு பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்).

        தை முதல் ஆணி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.

          தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும் ராம்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல்பொழுது விஸ்தாரமாகும்.

          இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தில் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிறுசிறு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு கடவுள் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள். இப்பண்பாடு நீட்சியாகி… தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.

          இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து… “நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ… அவரை முதலில் எழுப்ப வேண்டுமே..” என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.

          ‘கடவுளை மனித வழியில் அணுகுவது’ என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு…  கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற ‘நாயக-நாயகி பாவம்’ வரை வளர்ந்தது இந்த பண்பாடு.

          தொடர்ந்து அதிகாலையில் நீராடி… கடவுளை எழுப்புவதற்காக கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு ஆதலால் ‘பாவை நோன்பு’ ஆயிற்று.

          தன்னிகரில்லாத தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களாலேயே உருவாக்கப்பட்ட விரதவிழாதான் பாவை நோன்பு. இத்தகைய தூயதமிழ் கலாச்சாரத்தைத்தான் சைவத்தின் மாணிக்க வாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும், பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.

          திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

          தமிழை தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை ‘பாவைமாநாடு’என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகாபெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்தியிருக்கும். இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடைமருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன ‘ஸ்நான’பதில் அவர்களுக்கு புரியவில்லை.

          அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன் அது…

          கும்பகோண மடம்… சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்… குளித்து முடித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

          அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப்பார்த்தே தீருவது. அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்… நாட்டுக்கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்… மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

          அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்… ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்…’ என்றேன்.

          ‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’- என்றார் பக்தர்.

          எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்… விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.
         
          போனேன். கேட்டார். சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி… அவரை பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிருத்துல்யோ… அதனால நான் மெளனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ…”

          என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர். நானும் வெளியே வந்தேன். ‘நான்’ சொன்னதுதானப்பா… சுவாமிகள் மெளனத்தில இருக்கார். நாளைக்கு வாயேன்…’என்றேன்.

         
‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி… நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’… என தாய்மொழியாம் ‘தமிழில்’மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

                                        to be continue...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.