Monday, July 17, 2017

ஆண்பெண் – பெண்ணாண்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூலை-2017’ அன்று “கெளரவ ஆசிரியரின் தலையங்கம்” என்ற தலைப்பில் வெளியானது. 

ஆண்பெண் – பெண்ணாண்

          ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் விதம் எவ்வாறெனில்; பிருதிவி அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிருதி, ஆன்மா வென்னும் 7-ம் கூடி, சுக்கில சுரோணித சம்பந்த சப்த தாதுவாய், சிருஷ்டிக்குக் காரணமாயின. ஆதலால் ஆண்பாகம் சேராது பெண்ணுருவப்படாது. பெண்பாகஞ் சேராது ஆணுருவப்படாது. மேலும் ரூப பேதத்தைப் பெண் ஆண் என்பது அறியாமை. மேலும் அறிவினுயர்ச்சி தாழ்ச்சியாலும், சிருஷ்டிக்குக் காரணமான வித்து தங்குவதற்கு ஷேத்திரமானதாலும் ஒருவாறு உருவத்தால் கொள்ளலாம்; அனுபவத்தால் கொள்ளப்படாது. அறிவினுயர்ச்சி தாழ்ச்சியென்பது, ஜீவ அறிவாகிய மன  அறிவு பெண்ணிடத்தும் ஆன்ம அறிவாகிய அறிவு ஆணிடத்தும் உள்ளது. மேலும் மன அறிவு புத்தி அறிவு என்றும் சொல்லக்கூடும். ஆதலால் உருவம் குறிப்பது அவசியமல்ல. மேலும் ஆகாசத்தில் பிருதிவி தோன்றுவது போல் ஸ்திரீ பாகமாகிய பிருதிவியில் ஆகாசமுந் தோன்றும். ஆனதால் அனுபவத்தில் தெரியும்.

n  திருவருட்பிரகாச வள்ளலார்.

நான் பெண் மகளும் அலேன் வரும் ஆண் மகனும் அலேன் அலியும் அலேன்… (5754) என்று தம் இயலை பற்றி வள்ளற்பெருமான் பாடியுள்ளதை நாம் அறிவோம். இப்படிப்பட்ட அறிவு நமக்கு அனுபவத்தில் வரவேண்டும். இவ்வனுபவம் வருவதற்கு நாம் வள்ளலார் அருளிய ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்து வர வேண்டும். அவ்வொழுக்கத்தை கடைபிடித்து வந்தால், ஆன்மாக்கள் எல்லாம் / உயிர்கள் எல்லாம் ஆண், பெண், அலி என்கின்ற பால் வேறுபாடுகள் ஏதுமின்றி ஒத்து இருப்பதை அறியலாம்.

நாம் தற்போது பார்த்து வருகின்ற ஆண் மற்றும் பெண் என்ற பால் வேறுபாடுகள் தனித்தனியாக இறைவன் வகுத்திருந்தாலும், உண்மையில் ஒன்றினிலுள் ஒன்றாக / ஒரு பாலினத்துள் மற்றொரு பாலினத்தை கலந்தே வைத்துள்ளான். இதனையே ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் அமைந்துள்ளதாக நம்பெருமானார் உரைக்கின்றார். ஆண் இல்லையேல் பெண் இல்லை. பெண் இல்லையேல் ஆண் இல்லையாம். எனவே முதலில் தோன்றிய மனிதன் ஆண் என்றும் அதன் பிறகு பெண் தோன்றினாள் என்றும் சிலர் பேசி வருவது பொய் என்றாகிறது. இரு பாலினங்களும் ஒருங்கே தோன்றியிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து நாம் அறியலாம்.

எப்படியெனில், ஏழு தாதுக்கள் (தாது என்றால் நாடி என்றும் விந்து என்றும் குறிப்பிடுவர். இங்கே இயற்கைப் பொருட்கள் எனக்கொள்ள வேண்டும்.) இணைந்ததே பிண்டமாகின்றது. அந்த ஏழு இயற்கை பொருட்கள் என்னவென்றால், மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இறைவன், ஆன்மா.

இவ்வேழில் ஆணின் விந்தில் ஆகாயம், இறைவன், ஆன்மா என்கிற மூன்றும் அறிவு, சத்தி, வித்து என்னும்படியாகக் கூடி ஒரு மணியாக இருக்கின்றது.   

இவ்வேழில் பெண்ணின் சுரோணிதம் என்கிற இரத்தத்தில் மண், நீர், நெருப்பு, காற்று என்கிற நான்கும் சூரியன், சந்திரன், அக்கினி, உயிர் என்னும்படியாகக் கூடி சுரோணிதமாக இருக்கின்றது.  

ஆணின் மணியும், பெண்ணின் சுரோணிதமும் சேர்ந்தால்தான் பிறப்பு சாத்தியமாகும். எனவே ஆண் இல்லாது பெண்ணும் பெண் இல்லாது ஆணும் இல்லை.

முதலில் நாம் கண்டதுபோல் ஆண், பெண் என்று நாம் பகுத்தறியும் அறிவெல்லாம் அறியாமையே ஆகும். எனினும் அறிவின் உயர்வு தாழ்ச்சியினாலும், வித்து என்கிற ஆன்மா இருக்கக்கூடிய இடமாக இருப்பதால் ஒருவாறு ஆண் மற்றும் பெண் என்று வேறுபடுத்தியும் அறிவதில் தவறில்லை. ஆன்ம அறிவுடைய பெண்ணும் ஆணே. மன அறிவுடைய ஆணும் பெண்ணே. ஆனால், அனுபவ அறிவானது இவ்வேறுபாட்டை நமக்கு தெரிவிக்காது.

ஆன்ம அறிவு ஆண்களிடத்தே விளங்குவதால் ஆண் என்பவன் உயர்ந்தவனாகவும், மன அறிவு பெண்களிடத்தே விளங்குவதால் பெண் என்பவள் தாழ்ந்தவளாகவும் அறியப்படுகின்றது. எனினும் ஆண் பாகமாகிய ஆகாயத்தில் பெண் பாகமாகிய மண் என்கிற இப்பூமி எவ்வாறு தோன்றுகிறதோ, அவ்வாறே பெண் பாகமாகிய மண் என்கிற பூமியில் ஆண் பாகமாகிய ஆகாயமும் தோன்றுவதை அனுபவத்தில் காணலாம்.

அதாவது நாம் இந்த பூமியிலிருந்துக்கொண்டு ஆகாயத்தை காணுவது போல, பூமியிலிருந்து விலகி ஆகாயத்திலிருந்து பார்த்தால் பூமியும் தோன்றுவதை கற்பனை செய்தும் பார்க்கலாம். ஆகாயத்தில் பூமியின்ன் தோற்றமும், பூமியில் ஆகாய தோற்றமும் உண்டு. எனவே ஆண், பெண் பேதங்கள் அறியாமையின் விளைவே.

…மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப்
பயன்பெற நல்அருள் அளித்தபரம் பரனே…4642

மேற்காணும் வள்ளலாரின் பாடலின் படி ஆணும், பெண்ணும் சன்மார்க்கப் பயனான மரணமிலா பெருவாழ்வைப் பெற தகுதியானவர்களே என்பது தெளிவாகின்றது. மேலும் ஆண், பெண் என்கிற வேறுபாட்டினைப் பற்றி திரு அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் அறிவித்ததையும் நாம் இங்குக் காண்பது பொருத்தமாக இருக்கும்.



பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 704

பெண்ணினுள் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 706

பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 708

பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 710

பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி - 714

தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 718


n  தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.