Saturday, December 26, 2015

கிறிஸ்து



சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
கிறிஸ்து

SEPTEMBER -2015

உலகப் படைப்பு
 தொடக்கத்தில் கடவுள், ``திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!'' என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்'' என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், ``கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக'' என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ``மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்'' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்'' என்றார். அப்பொழுது கடவுள், ``மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம். (வாசகம் 1: 20 - 2: 4)
மேற்காணும் பைபிள் வசனத்தை நமது வள்ளற்பெருமானும் படித்திருக்கின்றார். அவர் தமது உரைநடைப்பகுதியில் இக்கருத்தை மறுத்தும் எழுதியுள்ளதை நாம் இங்கே காணலாம்.
     "இந்து வேதத்தின் முக்கியாமிசத்தை... கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லுவதின் உண்மை - அது வல்ல - யாதெனில்: சில அனுபவ விஷயங்களை அது விரிக்கின்றது. கைந்நொடிப்பொழுதில் 60-ல் 7 பாகம் கலையில் முடிந்தது. மேற்படி கலைகளாவன பெண்பாகத்தில் 4, ஆண்பாகத்தில் 3 - ஆக 7. ஒவ்வொரு கலையில் தாது அணுவாய்ச் சேர்ந்து, 7-வது கலையில் கரு சம்பூர்ணமாய்ச் சப்த தாதுவுங் கூடிய பிண்டாகும்." (திருவருட்பா - உரைநடை நூல் பக்கம் 356)
OCTOBER -2015

மாற்கு 8:36, 37

36. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

37. மனிதன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?    

மரணமிலா பெருவாழ்வு இந்து மதத்தில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றது, மற்ற மதங்களில் சொல்லப்பட்டிருந்தால், அது இந்து மதத்திலிருந்து எடுத்துக் கையாளப்பட்டுள்ளதாக வள்ளலார் கூறுவார். (திருவருட்பா-உரைநடைப் பகுதி-வேதாகமச் சிறப்பு). ஜீவ நட்டத்தைப் பற்றி இங்கே கிறுத்துவம் மேற்கண்டவாறு கூறுகின்றதை கவனித்தால், மரணமிலா பெருவாழ்வை இவ்வசனம் எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம்.

      ஜீவன் என்கிற சொல்லை வள்ளலார் தமது உரைநடைப் பகுதியில் பற்பல இடங்களில் பற்பல பொருள்களில் கையாண்டுள்ளார். நமது பிண்டத்தில் அகம் ஆன்மாவாகவும், அகப்புறம் ஜீவனாகவும் இருப்பதாக சுத்த சன்மார்க்கம் கூறுகின்றது. மனித தேகத்தில் சிரத்திலுள்ள ஜீவன் இறக்காது. கண்டத்தில் உள்ள ஜீவன் இறந்துவிடும் என்கின்றது சுத்த சன்மார்க்கம். ஆக, கண்டத்திலுள்ள அந்த ஜீவனை இறக்காமல் பாதுகாக்க, நாம் சாகாக் கல்வியினை பயில வேண்டும். நாம் இவ்வுலகில் எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தாலும் இறுதியில் கண்டத்திலுள்ள அந்த ஜீவனை நஷ்டபடுத்தி மரணமடைவதால் நமக்கு யாதொரு பயனும் இல்லை என்கின்றது இந்த கிறுஸ்துவ வசனம்.

      மனிதன் தன் ஜீவனுக்கு (தன் ஜீவன் என்பது ஜீவாத்மா) ஈடாக தன்னுடைய உடல், பொருள், ஆவி என்கிற தற்சுதந்தரத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இதுவே சாகாக்கல்வியின் முதல் நிலை. வள்ளலாரும் கல்பட்டு இராமலிங்க அய்யாவும் தம்முடைய தற்சுதந்தரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் ஒப்படைத்ததை ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். 
        
லூக்கா 12:15

15. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.

      எவ்வளவு ஆழ்ந்த கருத்தினை இவ்வசனம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது என்பதனை சுத்த சன்மார்க்கரே அறிவர். இவ்வுலகில் நாம் படைத்த பொருளை இழப்பது என்பது இயற்கை, ஆனால் இறைவன் படைத்த ஜீவனை நாம் இழக்கக் கூடாது. எனவே பொருளாசையை விட்டுவிட்டு நாம் ஜீவ ஆசை கொள்ளவேண்டும். ஜீவ ஆசை மேலிட்டு, அதனால் இவ்வுடலிலேயே ஜீவனை என்றும் நிலை நிறுத்துவதே சாகாக் கல்வி. வள்ளற்பெருமான் தாம் திருக்காப்பிட்டுக்கொள்ளும் முன்பு அங்கிருந்தோர்களை நோக்கி கூறியதும் இந்த வசனத்தை நினைவு கூறும்வகையில் இருப்பதை அறிகிறோம்,    

"இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்"

சுத்த சன்மார்க்கர்களுக்கு பொருள் என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது யாதெனில் "கருணையும் சிவமுமே" ஆகும். இந்த சுத்த சன்மார்க்கப் பொருளை வள்ளற்பெருமான் பெற்றது போல நாமும் பெறவேண்டும்.

NOVEMBER -2015

சிலை வழிபாடு

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடயமாகியிருக்கிறார் (Psalms 115:3-8)

சிலை வழிபாட்டின் இழிவை மேற்குறிப்பிட்ட வரிகள் எடுத்துரைக்கின்றன. இந்து மதத்தில்தான் சிலை வழிபாடு மிக அதிகமாக காணப்படுகின்றது. இச்சிலை வழிபாட்டை உபாய மார்க்கம் என்பார் வள்ளலார். இதன் மூலம் சில சித்திகளை பெறக்கூடும் என்பதை சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயமும் அறிந்திருக்கவில்லை என்பது வள்ளலாரின் கருத்து.

"ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாசஷரத்தை அடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்கள் உண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும்." என்று வள்ளலார் இந்த சிலை வழிபாட்டின் பயனை குறிப்பிடுகின்றார். இவரின் விளக்கத்தில்கூட, வெறும் சிலைகளினால் யாதொரு பயனும் விளைந்துவிடாது என்பது தெளிவாகின்றது.

இச்சிலை வழிபாட்டால் கிடைக்கும் சித்திகளை திரிசியக் காட்சி என்கிறார் வள்ளலார். "சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை." என்கிறது சுத்த சன்மார்க்கம். எனவே சிலை வழிபாடு நமக்குத் தேவையில்லை என்பது புலனாகின்றது.

தீட்டு

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.     (Mark 7:20-23)

கிறுஸ்து சொல்லுகின்ற இந்த தீட்டானது, நமது மனதின் வாயிலாக நிகழக்கூடியதாகும். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்கிறது திருக்குறள். மனத்தின் கண் குற்றமற்று / தீட்டு இன்றி இருப்பதே சிறந்த அறம். மேற்காணும் மனத் தீட்டினை ஒழிக்க கரண ஒழுக்கம் என்கிற ஒன்றை வள்ளலார் வகுக்கின்றார்.

"கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்; இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்மதிப்பில்லாதிருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்." இவ்வாறு நமது மனத்தை கண்டித்துவர தீட்டுகள் நம்மை விட்டு அகலும்.

DECEMBER -2015

கிறுஸ்துமஸ்

இன்றைய உலகில் மிகவும் பெரும்பாண்மையினர் பின்பற்றும் மதங்களில் முதலில் இடம்பெறுவது கிறுஸ்துவ மதமே ஆகும். அக்கிறுஸ்துவ மதத்தை தோற்றுவித்த இயேசு கிறிஸ்து டிசம்பர் 25-ஆம் நாள் பிறந்ததாக கூறப்படுகின்றது. தொடக்கக்கால கிறிஸ்துவர்களிடையே இருந்த ஒரு நம்பிக்கையின்படி, மார்ச் மாதம் 25-ஆம் நாள் அன்னை மரியா அவர்கள் இயேசுவை கருத்தரித்தார் என்று குறிப்பிட்டனர். அதன்படி அன்றிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25-ஆம் நாள் இயேசு பிறந்தார் என்று கிறுஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள் (மத்தேயு 1:22-23.)

ஆம்... ஒரு கன்னியின் வயிற்றில்தான் இயேசு பிறந்தார் என்கிறது பைபிள். கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

இயேசு உண்மையிலேயே தந்தையின்றி பிறந்தாரா? என்பது அவரவர்கள் நம்பிக்கையின்படி மாறுபடும். ஆனால் வள்ளற்பிரானின் சொற்படி அவ்வாறு பிறப்பதற்கும் முடியும் என்கிறது திருவருட்பா.

"கன்னியின் வயிற்றில் கரு பக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன் அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேகசம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடன் கருத்தரித்தல். மேற்படி பக்ஷத்தில் பக்குவம் கண்ணால் பார்த்த உடனே புணர்ச்சியன்றிக் கருத்தரித்தல். சம்புபக்ஷம் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல். பிரகிருதி பக்ஷத்தால் சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த்தோன்றுதல். விபுபக்ஷசிருஷ்டி பார்த்தவுடன் திரண முதலானவற்றையும் நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது. மேற்படி சிருஷ்டிகள் பல; வேதாகமங்களிலேயும் பலபட விரிந்தன." (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-355)

மேற்படி சிருஷ்டியில் "சம்புபசஷம்" என்ற "வாக்கினல் சொன்னவுடன் கருத்தரித்தல்" என்கிற பிரிவில் இயேசுவின் பிறப்பினை நாம் இங்கு ஒப்பிட்டால், கன்னியின் வயிற்றில் பிறப்பதுவும் சாத்தியமே.

உலகுக்கெல்லாம் ஒரு பொதுப்படையான மார்க்கத்தை வள்ளற்பிரான் கொடுத்ததுபோல், இயேசுவும் தமது பிறந்தநாளையே இவ்வுலகிற்கெல்லாம் ஒரு பொதுப்படையான நாள்காட்டியாக இருக்கும்படி செய்துவிட்டார். ஆம்... இயேசுவின் 2016-ஆம் ஆண்டு பிறந்தநாளை நாமெல்லாம் புதிய காலண்டர் வாங்குவதன் மூலம் கொண்டாட இருக்கிறோம்.

உரோமர்கள் டிசம்பர் 25-ஆம் நாளை வெற்றி வீரன் சூரியக்கடவுள் (sol invictus) பிறந்தநாளாக "நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினர். அதே நாளில் இயேசுவின் பிறந்தநாளும் வருவதால், கிறிஸ்துவர்கள் இவரின் பிறப்பை சூரியனோடு ஒப்பிடுவர்.  

O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born

ஓ, எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின் செயல், சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது   

எனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.

இயேசு தமது மரணத்தருவாயில், "ஓ... தேவனே... என்னை ஏன் கைவிட்டீர்?..." என்று தமது இறைவனிடம் விம்மி கேட்கிறார். வள்ளற்பிரானோ "கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே" என்று மகிழ்ந்து பாடுகிறார்!! அதன்படி வள்ளற்பிரான் மரணத்தை வென்றார். ஒளியாகவே வாழ்கிறார்.

ஒளியே இறைவன் என்று நம்பும் கிறிஸ்துவர்களுக்கு சன்மார்க்க விவேக விருத்தியின் வாழ்த்துக்கள்.
தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.