Tuesday, December 6, 2016

யமக வர்க்கம்

யமக வர்க்கம் 

1. எண்ணங்கள் மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது. எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப்படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டிபோல, அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன. அதுபோல ஒருவனுடைய நல்லெண்ணங்கள், செயல்கள் அவனை எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.

 சிற்றின்பத்தை அடைய விரும்பியும், பஞ்சேந்திரியங்களை அடக்காமலும், மிதமிஞ்சிய உணவை உண்டும், சோம்பல் கொண்டும், சுறுசுறுப்பில்லாமலும் இருக்கிறவனை, மன்மதன் பலமற்றமரத்தைச் சூறாவளிக்காற்று பெயர்த்து வீழ்த்துவது போல, வீழ்த்தி விடுவான். சிற்றின்பம் கெட்டது என்று கண்டும், பஞ்சேந்திரியத்தை அடக்கியும், மித உணவு கொண்டும், பக்தியும் சுறுசுறுப்பும் அடைந்தும் உள்ள ஒருவனை, கற்பாறையாலான மலையைச் சூறாவளிக்காற்று அசைக்க முடியாதது போல, மன்மதனால் அசைக்க முடியாது.

யாரேனும் ஒருவர் மஞ்சள் சீவர ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புவாரானால், அவர் மாசுள்ள மனமுடையவராய் தன் அடக்கமும் உண்மையும் இல்லாமலிருப் பாரானால், மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆகமாட்டார். மனமாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்னடக்கமும் மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பாரானால், திண்ணமாக அவரே மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆவார்.


சாரம் (மெய்க்காட்சி) அற்றவைகளைச் சாரம் உள்ளவையென்றும், சாரம் உள்ளவைகளைச் சாரம் அற்றவையென்றும் கொண்டிருப்பவர், தவறான காட்சியையுடையவராய் இருப்பதனால், அவர் மெய்க்காட்சியை அடைய மாட்டார். சாரமுள்ளதைச் சாரம் என்றும், சாரம் அற்றதைச் சாரம் அற்றது என்றும் காண்கின்றவர், மெய்க்காட்சியைக் கொண்டிருப்பதானாலே, மெய்யை அவர் அடைகின்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.