Tuesday, December 6, 2016

சித்தர்கள் பார்வை

சித்தர்கள் பார்வை

முக்காடிட் டங்கமுற்று மூடித் துயிலிலிரண்
டக்கிக்குந் தோட்கும் அதிபலமா – மிக்கான
சீதவெயில் தூசிபனி சீறிவர காற்றிவையா
லோதவரு துன்புமிலை யுன்.

தேரையரின் இந்தப் பாடல் தெரிவிப்பது, தலைக்கு முக்காடிட்டு தூங்கினால் இரண்டு கண்களுக்கும், தோளுக்கும் அதிகபலம் உண்டாகும். அத்துடன் சீதம், வெய்யில், தூசி, பனி, காற்று இவற்றினால் எந்த துன்பமும் நேராது என்கிறார்.

அண்டவங்கி யுண்டவுறை யங்கியரும் பத்தியத்தா
லண்டவங்கி மூன்றோ டனந்தலது – கொண்டவங்கி
கூடுங்கா னேத்திரநோய் கூடு மிரத்தபித்தம்
நீடுங்காண் விந்துநீ ராம்.

தேரையரின் இந்தப் பாடல் தெரிவிப்பது, பகல் உறக்கத்தை தவிர்க்கச் சொல்கிறார். அதிலும் மருந்து உண்போர், பத்தியம் இருப்போர் பகலில் தூங்கக் கூடாது. உறங்கினால் மருந்தின் வெப்பம், சூரிய வெப்பம், உணவுக் கட்டுப்பாட்டினால் ஏற்படுகின்ற வெப்பம் ஆகிய மூன்று வெப்பத்துடன் பகல் உறக்கம் கொள்வதால் ஏற்படும் வெப்பமும் சேர்ந்து கண் தொடர்பான நோய்களும், ரத்த பித்த நோயும் அதிகரிக்கும். அத்துடன் விந்து நீர்த்துப் போகும் என்கிறார்.

தண்ட மேட்டரக்ஷீய முருத்தம்பஞ்
சருவாங்க மூக்கிராக் கிரசஞ்சுப்தி
துண்ட முறுவணுத்தம்பந் திருக்குத்தம்பஞ்
சோணிதமாட்டியம் புருவா டோபகந்தண்
அண்டு கிருத்திரசியூர்த் துவஞ்சம்பூக
மவபேதம வந்திர மவதானந்தான்
விண்டவிவுர் தாசியமிப் பதினெண்காக்கும்
வித்தாகும் பகலனந்தன் மேவின்மாதோ.
தேரையரின் இந்தப் பாடல் தெரிவிப்பது, பகலில் உறங்குவதால் தண்டம், மேட்டரக்ஷீயம், ஊருத்தம்பம், சருவாங்கம், உக்கிராக்கிரம், சுப்தி, அனுத்தம்பம், திருக்குத்தம், சோணிதம், ஆட்டியம், புருவாடோபகம், கிருத்திரசி, ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம், அவந்தந்திரம், அவதானம், விவுர்தாசியம் என பதினெட்டுவிதமான வாத நோய்கள் உடலில் வந்து சேரும் என்கிறார். இதனால் பகல் உறக்கத்தினைத் தவிர்க்க வேண்டும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.