Tuesday, December 6, 2016

ஊசியின் காதில் ஒட்டகம் புகும்

ஊசியின் காதில் ஒட்டகம் புகும்


இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே".

உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே களவு செய்யாதே பொய்ச்சான்று சொல்லாதே வஞ்சித்துப் பறிக்காதே உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.

அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார்.

அப்போதி இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார்.

சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.

அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.

அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரர்களையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

முதன்மையானோர் பலர் கடைசி ஆவர், கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார். (மார்க் - 10.17 - 10.31)

சுத்த சன்மார்க்கமும் இதன் உண்மையினை பேருபதேசத்தில் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. "இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள்"

நம்மால் செல்வத்தையும் விடமுடியவில்லை, நான் என்கிற ஆணவத்தையும் விடமுடியவில்லை, சாதி சமய மத பழக்க வழக்கங்களையும் விட முடியவில்லை! பிறகு எங்ஙனம் சன்மார்க்க லாபம் கிட்டும்?

இம்மை வாழ்வென்பது சாதி, மத, இனத்துள் காணும் சிற்றின்பம் ஆகும். மறுமை வாழ்வென்பது, அவைகளை விடுத்து சன்மார்க்க நெறி கொண்டு பேரின்பம் காண்பதாகும். சுத்த சன்மார்க்கப் பாதையில் வாழ்ந்து வருபவர்கள் தற்போது மறுமை வாழ்வில் இருக்கின்றார்கள் எனப் பொருள். 





2 comments:

  1. வள்ளலார் கொள்கை ஏசுவின் கொள்கை ஒன்றே... ஈசன் அருளட்டும்

    ReplyDelete
    Replies
    1. இருவரும் ஒரே கொள்கையினர் அல்ல. ஆனாலும் சில போதனைகளில் ஒத்து போவார்கள்.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.