Saturday, August 6, 2016

அன்பெனும் அணு



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

அன்பெனும் அணு

அறிவியலாளர் திரு.ஜான் டால்ட்டன் என்பவர்தான் 1810-ஆம் ஆண்டு, ஒரு குறிப்பிட்ட மூலகத்தின் அணு சிறியதாக இருப்பினும் அம்மூலத்தின் எல்லா தன்மைகளையும் அது பெற்றுள்ளது என்று முதன் முதலில் எடுத்துக்காட்டினார். 'பொருள் சிதைந்து உருவாகும் மிகச்சிறிய துகள்களே அணுக்கள், அவற்றை மேலும் சிதைக்க முடியாது' என்றும் கூறினார். அணுவே சிறிய பொருள், அதைவிட சிறிய பொருள் வேறொன்றுமில்லை. என்னும் இவருடைய கண்டுபிடிப்பு 1896-ஆம் ஆண்டுவரையே நீடித்தது.




ஆனால் 1896-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பெளதிக விஞ்ஞானி ஹென்றி பெக்கெரல், இருளிலில் ஒளிரும் தன்மையுள்ள பல பொருள்களைச் சோதித்து வந்தார். கடைசியாக 'யுரேனியம் தான் தானாகவே கதிர்வீசும் மூலகம் என்று கண்டுபிடித்தார். சில காலத்திற்கு பிறகு, மேரி கியூரி அம்மையார் யுரேனியம் போலவே இயங்கக் கூடிய வேறுசில மூலகங்களையும் கண்டுபிடித்தார். அவரும் அவருடைய கணவர் பியரிகியூரி என்பவரும் முதன்முதலில் அதிக சக்தி வாய்ந்த கதிர்களை வீசும் 'ரேடியம்' என்பதைக் கண்டுபிடித்தனர்.







நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் பல டன்கள் எடையுள்ள பிட்ச் பிளெண்டைச் சிதைத்து, அதிலிருந்து 1/10 கிராம் அளவு தூய ரேடியம் உப்பினைத் தயாரித்தனர். அதே அளவு யுரேனியத்தின் இயக்கத்தைப் போல அதன் இயக்கம் பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருந்ததை அவர்கள் கண்டு வியந்தனர்.

அவர்களது ஆராய்ச்சியின் விளவாக அணுக்களின் தன்மையை அறிவதற்கு, மருத்துவத் துறையில் குறிப்பாக புற்று நோய் சிகிச்சைக்கு 'ரேடியம்' மிகவும் பயன்படக்கூடியதாயிற்று.

கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு பல கேள்விகளை எழுப்பியது. யுரேனியமும் பிற கதிரியக்கப் பொருள்களும் கதிர்களை வெளியிடுவது வியப்பாக இருந்தது. அக்கதிர் எதனால் ஆனது? அது எங்கிருந்து வந்தது? அது எப்படி உண்டாக்கப்பட்டது? கதிர்களை வெளியிட்ட பொருள்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை காண மிகவும் முயன்றவர் எர்னெஸ்ட் ரதர்ஃபர்ட் ஆவார்.



அவர் பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டுபிடித்தார். இவை ஒளிக்கதிர்கள் ஆகும். எக்ஸ்ரே கதிர்களை போன்றவை. ஆனால் அதை விட அதிகமாக ஊடுருவும் ஆற்றல் வாய்ந்தவை. ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் அணுவிலிருந்தே வெளிப்படவேண்டும் என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டனர். வேறு எங்கிருந்தும் அவைகள் வெளிப்பட முடியாது. வேகமான துகள்களையும் காமா கதிர்களையும் அணுக்கள் வெளியிட முடியும் என்பதிலிருந்து இரண்டு புதிய புரட்சிகரமான கருத்துக்கள் தோன்றின. முதலாவதாக டிமாக்ரிடஸ், டால்டன் மற்றும் பலர் நினைத்ததைப் போல் அணுக்கள் சிதைக்க முடியாதவை என்பது தவறு. இரண்டாவது அணுக்கள் ஏராளமான சக்தியை தம்முள் அடக்கி இருக்க வேண்டும் என்பது.


அணுக்களுள் அடக்கப்பட்டுள்ள பேரளவு தேங்கிய சக்தியைப் பற்றியும், இந்த சக்தியை அணுக்களிலிருந்து விடுவிக்கவும், அதன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மனிதர்கள் கற்றுக்கொண்டால், மிகமிக அதிகமான அளவு வேலையை செய்து கொள்ளும் ஆற்றலைப் பெறமுடியும் என்பதைப் பற்றியும் அறிவியல் ஆய்வாளர்கள் பேசத் தொடங்கினர்.  




1919-ஆம் ஆண்டிற்கு பிறகு ரதர்ஃபர்ட் என்பவர் புரோட்டான்களை கண்டுபிடித்தார். 1932-ஆம் ஆண்டு ஆங்கிலேய பெளதிக விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் என்பவர் நியூட்ரான்களை கண்டுபிடித்தார்.




டேனிஷ் என்பவர் பெளதிக விஞ்ஞானி நீல்ஸ் போர் மற்றும் ரதஃபர்ட்டினைப் போன்றே அணுவின் மைய உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் இயங்குவதை விளக்கும் கணக்கியல் விளக்கத்தை உருவாக்கினார். ஆக அணுவினுள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள் அடங்கியுள்ள உண்மையை அறிவியல் வல்லுநர்கள் கண்டறிந்தனர்.




1939-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஜெர்மணியை ஆண்ட ஹிட்லர் போரை தொடங்கியவுடன் கொடுமைகளுக்கு அஞ்சி போர் (Boher)எனும் விஞ்ஞானி அமெரிக்காவிற்கு சென்றார். அவரைப் போன்றே ஹிட்லரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அல்லது அச்சத்திற்கு ஆலான இத்தாலி, போலந்து, அங்கேரி முதலிய நாடுகளிலிருந்து பல ஆய்வாளர்கள் வெளியேறினர்.

அமெரிக்காவிற்கு ஐரோப்பியாவிலுள்ள பெரும்பாலான விஞ்ஞானிகள் வந்துவிட்டனர். ஐன்ஸ்டின் அணுவின் சிதைவில் அக்கரை காட்டி வந்தார். பொருண்மை (Mass)சக்தியாகவும், சக்தி பொருள் மையமாகவும் மாறமுடியும். பொருண்மை ஒவ்வொரு முறை ஆழ்ந்ததாகத் தோன்றும் பொழுதும் ஓரளவு சக்தி உண்டாக்கப்படுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

விக்னரும், இஸ்ஜிலாட்டும் ஐன்ஸ்டினுடன் பேசி, விஞ்ஞானிகளையும் அரசாங்கத்தையும் இனைக்கும் பெருந்தகையாக ஐன்ஸ்டினே இருக்க முடியும் என்று முடிவு செய்து, அமெரிக்க குடியரசு தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் ஒன்றை, அவர்கள் இருவரும் எழுதி அதில் ஐன்ஸ்ட்டின் கையொப்பாம் இட வேண்டும் என முடிவு செய்தனர்.




1939 ஆகஸ்ட் இரண்டாம் நாள் 'வரலாற்றில் முதல் முறையாக சூரியனிடமிருந்து வராத சக்தியை மனிதன் பயன்படுத்தப் போகிறான்' என்று ஐன்ஸ்ட்டின் அக்கடிதத்தில் இறுதியில் எழுதிக் கைய்யெழுத்திட்டார்.


ரூஸ்வெல்ட் 'யுரேனிய ஆலோசனைக் குழு' ஒன்றை அமைத்தார். விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொண்டு குடியரசு தலைவருக்கு அவர்களது கண்டுபிடிப்புகளை - கருத்துகளை அறிவிக்கும் பொறுப்பு அக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

போர் காலமாததால், அணு ஆராய்ச்சி இரகசியமாக வைக்கப்பட்டுத் தனியாக பாதுகாக்கப்பட்ட மூன்று நகரங்களில் நடத்தப்பட்டது.



1942- டிசம்பர் 02-ஆம் நாள் அணு ஆயுதம் பிறந்த நாளாகும். அந்த நாளில், தானே இயங்கும் அணுவின் முதல் தொடர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி, அணு சக்தியைக் கட்டுபாட்டுடன் வெளியிடும் முறையை அறிவியல் ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தினர்.




1945-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி காலை ஐந்தரை மணிக்கு மெக்சிகோ பாலைவனத்தில் லாஸ் ஆலமாஸிக்குத் தெற்கே இருநூறு மைல் தொலைவிலிருந்த ஆலாமோகோர்டோ என்ற இடத்தில் (சங்கேத பெயரான 'டிரினிட்டி'யில்) அணுவை பிளந்தனர்.

கணக்கீடுகளின் படி அணுகுண்டுகள் வேலை செய்யுமா என்று பார்ப்பதற்கான சோதனையே டிரினிட்டியில் நடைபெற்ற வெடிப்பு ஆகும். விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆற்றல் வாய்ந்ததாக அது இருந்தது.

பின்னர் அதிக வெடிப்பை பற்றி அமெரிக்க அரசின் போர் துறைக்கு ஜெனரல் ஃபாரெல் அனுப்பிய அறிக்கையில் பின்வருமாறு விளக்கினார்.

"நண்பகல் சூரியனைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்த பேரொளி ஒன்று அந்த இராஜ்ஜியம் முழுவதையும் ஒளிமயமாக்கியது. தங்க நிறம், கருஞ்சிகப்பு, ஊதா, சாம்பல் நிறம், நீலம் ஆகிய பல நிறங்களுடன் அது காட்சியளித்தது. அருகிலிருந்த மலைத்தொடரின் ஒவ்வொரு சிகரமும், வெடிப்பும், முகடும் ஒளி மயமாக்கப்பட்டன. அதன் தெளிவும் அழகும் விளக்குவதற்கு இயலாது. வெடிப்பு ஏற்பட்ட பிறகு, முப்பது வினாடிகளுக்குள் முதல் காற்றதிர்ச்சி தோன்றி, மக்களையும் பொருள்களையும் பெரிதும் அழுத்திவிட்டது. அதை அடுத்து உடனே ஊழிக்காலத்தைப் போன்ற, வன்மையான தொடர்ச்சியான பயங்கரமான பேரிரைச்சல் ஒன்று எழுந்தது... மாபெரும் நாய்குடை வடிவத்தில் ஒரு பெரிய மேகம் காற்றில் எழும்பியது."


" அந்த வெடிப்பு பாலைவனத்தில் அரைமைல் விட்டத்தில் பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. அப்பள்ளத்தின் மேற்புறத்தில் இருந்த மணல் உருகிவிட்டது. அந்த மணல் மீண்டும் உறுதிபட்ட பொழுது, அப்பள்ளத்தின் மேற்புறத்தில் பச்சைக் கண்ணாடி திரை போன்று ஒன்று அமைந்துவிட்டது."




1916-ஆம் ஆண்டு லாவ்ராஃபெர்மி (Lavra Fermi)எழுதிய "அணு ஆற்றலின் கதை" (The story of Atomic energy)என்ற நூலில், "பேரொளி" ஒன்று உருவாகியது என்றும் அந்த இராஜ்ஜியம் முழுவதையும் ஒளிமயமாக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியே, "ஆயிரம் சூரியன் ஒன்று சேர்ந்து பிரகாசிப்பதை போன்ற பேரொளி" அந்த பாலைவனத்தில் அகன்ற, மைல் கணக்கான பரப்பில் பரவிற்று. பேரொளி பரவிய முப்பது வினாடிகளுக்கு பிறகு, எதிர்ப்பு அழுத்தத்தின் விளைவாக சூராவளிக்காற்று வீசத்தொடங்கியது. கோபுரத்திற்கு ஐந்து மைல் தொலைவில் இருந்தவர்களை கூட இக்காற்று அடித்து வீழ்த்தியது. புயல்காற்று அடுத்துக் கிளம்பியது. இடிபோன்ற குமுறல் ஒலி அதைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த கர்ஜனை சப்தம் 'ஊழிக்கால எச்சரிக்கை போல் ஓலமிட்டது'. இக்காற்றுக் கொதித்ததால் மண்டியெழும் புகை மண்டலம், நாய் குடைபோல உருவெடுத்து காணும் இடமெலாம் பரவலாயிற்று. அங்கிருந்த மணல் பறப்பு முழுவதும் மாணிக்க பச்சை நிறத்தில் வழுவழுப்பான பளிங்கு கண்ணாடி போல் மின்னியது என்றெல்லாம் "புதிய விஞ்ஞான வெற்றிகள்" (Triumphs of modern science)என்னும் நூலில் அந்த அணு வெடிப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.



1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 06-ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா என்ற நகரத்தின் மீது முதல் அணு குண்டை வீசியது.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 09-ஆம் நாள் இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. அத்துடன் இரண்டாவது உலகப் போர் முடிவுற்றது.




"விஞ்ஞான அருளாளர் வள்ளலார்" என்ற நூலில் நான் வாசித்ததே இதுகாறும் நீங்கள் வாசித்தவை ஆகும். இதனை எழுதியவர் பட்டுக்கோட்டை திரு.நா.முத்துக்குமாரசாமி என்பவராவார். இந்நூலில் இவர் எழுதிய 'காணிக்கை' என்ற தலைப்பை படித்தபோது அவர் எவ்வாறு சன்மார்க்க நிலைக்கு வந்தார் என்பதனை தெரிந்துக்கொள்ள முடிகிறது, அதனை அப்படியே உங்களுங்கும் வழங்குகின்றேன்;

"திருவருட்பிரகாச  வள்ளலாரின் மாணாக்கரான சமரச பஜனை காரணப்பட்டு திரு.ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் நெஞ்சை உருக்கும் சொற்பொழிவைக் கேட்டு, அவருடன் நெருங்கிப் பழகி, புலால் உண்பதை விடுத்து, சமரசத்தையும் இரக்கத்தையும் கொண்டு வாழ்ந்து, 1914-ஆண் ஆண்டு முதல் வடலூர் சென்று வள்ளலார் வழி நின்று, சத்தியச் தருமச்சாலை, சத்திய ஞானசபை, சித்திவளாக திருமாளிகை ஆகிய நிலையங்களுக்குத் தொண்டு செய்து, சத்திய தருமச்சாலை திருப்பணியை 1922-ஆம் ஆண்டு நாகை சமரச சுத்த சன்மார்க்க சாதக சங்கத்துடன் சேர்ந்து செய்து, சத்திய ஞானசபை திருப்பணியை அருட்டிரு அமாவாசை பரதேசி அவர்களைக் கொண்டு முதன் முதல் தொடங்கி, செல்லுமிடங்களிலெல்லாம் சன்மார்க்க சங்கங்களை நிறுவி, 1928, 1929- ஆம் ஆண்டில் வடலூரில் முதல் இரண்டு சமரச சுத்த சன்மார்க்க மாநாடுகளை நடத்தி, 1946-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை அங்கே அமைத்துப் பதிவு செய்து, என்னையும் இத்துறையில் ஈடுபடுத்திச் செம்மைபடுத்தி இறுதி வரையில் சன்மார்க்க சீலராக வாழ்ந்த என் அருமை தந்தை உயர்திரு. எஸ்.நாராயணசாமி அவர்களுக்கும் என் அருமைத் தாயார் திருமதி.நா.கங்கையம்மாள் அவர்களுக்கும் இந்நூலை காணிக்கையாக்குகிறேன்."




மேற்காணும் 'காணிக்கை' என்கிற பத்தியிலிருந்து நாம் பல சன்மார்க்கச் செய்திகளை அறிந்துக்கொள்ள முடிகிறது. நிற்க.

அணு சக்தி எவ்வாறு உலகியலில் தோன்றியது என்பதை நாம் இதுகாறும் திரு.நா.முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய நூலில் இருந்து பார்த்தோம். தற்போது பெரும்பாலான நாடுகளில் இந்த அணு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகள் அணுவினை ஆக்க சக்திக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. அன்பின் உருவாய் இருக்கும் அணுவினைக் கொண்டு நாம் நமது இனத்திற்கே துன்பத்தை கொடுத்துக்கொள்ளக்கூடாது. அணுவினை அன்பின் வழியாகவே அணுக வேண்டும் என்று வள்ளற்பெருமான் கூறுகிறார்.

மனிதனானவன் இவ்வுலகில் தோன்றி பல்லாயிரங்கணக்கான ஆண்டுகள் ஆனபோதும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களும் மதக்கடவுள்களும் மதநூல்களும் தோன்றி ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் வெளிப்படாத இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்களும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தான் வெளிப்பட்டு இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  இவை ஏதோ தற்செயலாக நடந்தேறியுள்ளது என்று எண்ணுதல் தவறு. இதன் பின்னணியில் வள்ளற்பெருமான் ஆட்டுவிப்பதையும் சுத்த சன்மார்க்கம் செயல்படுவதையும் நாம் உணரவேண்டும்.

வள்ளற்பெருமான் இவ்வுலகில் வருவிக்க உற்ற பின்புதான் அணு ஆற்றல் உட்பட மற்ற அனைத்து விஞ்ஞான தொழில்நுட்பங்களும் மனிதர்களின் அறிவுக்கு புற அனுபவமாக வெளிப்பட்டது. அதற்கு காரணம் வள்ளற்பெருமான் அணுவின் ஆற்றலை அக அனுபவத்தில் கண்டு தெளிந்ததே ஆகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் ஐந்தொழில் செய்யும் ஆற்றலையும் பெற்றுக்கொண்ட வள்ளற்பெருமான், அதன் மூலம் இந்த அணு ஆற்றலையும் இவ்வுலகில் புற அனுபவமாக்க விரும்பியதன் காரணமே இவ்வளவும் பல விஞ்ஞானிகளால் வெளிப்பட்டது.



வள்ளலார் தான் கண்ட அக அணு அணுபவத்திற்கு சில சான்றுகள்;

"அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியே" (திருவருட்பா-3269)     

அண்டமாய் அண்டத்து அணுவாய்... 1965-16

அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்து... 1965-60

ஓரணுவோர் மாமலையாய் ஓர் மாமலையது வோர்
சீரணுவாய்ச் செய்ய வல்ல... 1965-88

ஈண்டோர் அணுவாய் இருந்த நீ... 1965-607

அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே... 2867

படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
          பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
          கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்த காரணமாய்க் காரணங் கடந்த
          அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்... 3999


அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
          அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில் ஓர்கோடிக் கூற்றில் ஒன்றாகப்
          பேசநின் றோங்கிய பெரியோன்... 4000

அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
          அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை... 3938

அடுக்கிய பேரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
          அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே... 4640

தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
          சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
          அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
          கிறைஒன்றாம்...  5641

மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
          மதித்தஅதன்உள் ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்... 5648

வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்... 5651

வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
          வயங்கிய தாரகையாய் இவ்வகைஅனைத்தும் தோற்றும்... 5666

அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
          அரும்பெருஞ் சித்தரே... 4357

அணுவினை பிளக்க முடியும் என்று வள்ளற்பெருமான் பாடியிருப்பதை பாருங்கள். (திருவருட்பா-4000)அதனுள் பேரொளி அமைந்திருப்பதையும் (3269, 5666), அணுவினுள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்றவை இருப்பதையும் (5641) ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வள்ளற்பெருமான் கண்டறிந்துள்ளதையும் (3999) நாம் மேற்காணும் சில பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் தற்போது நாம் அணுபவிக்கும் மின்சாரத்தை பற்றியும் வள்ளற்பெருமான் பாடியிருக்கிறார். மின்னலைப் போன்ற மின்வடிவம் என்று இறைவனை புகழ்வதிலிருந்து நாம் இதன் உண்மையை அறிகிறோம்.

மின்போன்ற செஞ்சடையாய்... 1962-283

மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ... 1965-495

நாதமுற முழங்கி எங்கும் மின்னாகிப் பரவி... 2082

இவ்வாறு பல இடங்களில் வள்ளற்பெருமான் மின்னாற்றலை பற்றி புகழ்ந்திருக்கின்றார். மின் என்றாலும் ஒளியைத்தான் குறிக்கும். மின்னல் என்பதும் ஒளிதான். நாம் தற்போது பயன்படுத்தும் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். அணுவிற்குள் அமைந்த அந்த பேரொளி என்பதே மின்சாரம்தான். ஆனால் அணுக்குள் இருக்கும் மின்சாரத்தை கண்டுபிடிக்கும் முன் இவ்வுலகில் வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்திலேயே அதாவது 1831-ஆம் ஆண்டு மைக்கேல் ஃபாரடே என்பவர் மின்சக்தியினை உற்பத்தி செய்து காண்பித்தார். அதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் உருவாகின. பின்னர் 1867-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் டைனமோ கண்டுபிடிக்கப்பட்டு மின்சார மோட்டார்களும் டிரான்ஸ்பார்மர்களும் உருவாக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் உலகில் பல பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கியாகிவிட்டது. 1858-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நீர் மூலமும் அனலின் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் அணுசக்தி மூலமும் சூரிய ஒளியின் மூலமும் மின்சாரம் உற்பத்தியாகிறது. 1879-ஆம் வருடம்தான் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களால் மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகே மின்சக்தி ஒளிசக்தியாக இவ்வுலகில் கண்டெடுக்கப்பட்டது.


இதனன்றி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே கிரேக்க தத்துவஞானி தேல்ஸ் என்பவரால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பாரும் உளர். இது உண்மை என்றாலும் மக்கள் பயன்பாட்டிற்கு அக்கண்டுபிடிப்பு உருவாக்கம் பெறவில்லை.

இப்படி பல்வேறு வகையில் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை உற்பத்தி இடத்திலிருந்து பயன்பாட்டு இடத்திற்கு கொண்டு செல்ல நாம் இன்னும் கம்பி என்னும் ஊடகத்தையே நம்பியுள்ளோம். எதிர்காலத்தில் கம்பி இல்லா மின்சாரமும் வரபோகின்றது. அந்த மின்சாரம் உலக மக்களுக்கு இலவசாமாகவே கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. வானத்திலிக்கும் மின்காந்த அலைகள் மூலம் நாம் எப்படி வானொலி, அலைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றை உபயோகிக்கிறோமோ அவ்வாறு மின்சக்தியும் நமது ஒவ்வொரு வீட்டிற்கும் தொழிற்சாலைக்கும் நேரடியாக கிடைக்கும்.

இதற்கெல்லாம் வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கம் வழிவகை செய்யும். இவை எல்லாவற்றிற்க்கும் அந்த அணுதான் மூல காரணமாக இருக்கப்போகிறது. 1823-ஆம் ஆண்டு தொடங்கி, அணுவின் வீதியிலே நடந்து வருகிறது சுத்த சன்மார்க்க நீதி.   

http://www.vallalarspace.com/user/c/V000021579B
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing





6 comments:

  1. ஆச்சிரியமூட்டும் சிறந்த பகிர்வு!

    ReplyDelete
  2. Old is gold.. மகன் தந்தைக்காற்றும் செயல்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.